பாட்னா: வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பா.ஜ நிர்வாகி, பெண் டாக்டரிடம் அத்துமீறியதால் தாக்கப்பட்டார். பிரபல யூடியூபரும், பீகார் பாஜ நிர்வாகியுமான மணீஷ் காஷ்யப், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை வெளியிட்டு கைதானவர். தற்போது பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூனியர் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டதால், அவரை சக மருத்துவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். பா.ஜ நிர்வாகிகள் கொடுத்த தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று மணீஷ் காஷ்யப்பை மீட்க முயன்ற போது ஜூனியர் மருத்துவர்கள் அவரை விடவில்லை. 3 மணி நேரம் சிறைபிடித்தனர்.
பின்னர் மணீஷ் காஷ்யப் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்ததால் ஜூனியர் மருத்துவர்கள் அவரை விடுவித்தனர். முகத்தில் காயங்கள் தெரிந்த நிலையில் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தார். அவர் தனது நண்பர் மணி திவேதியுடன் மருத்துவமனையில் இருந்து காரில் புறப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் படம் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்று பாட்னா தெற்கு ஏஎஸ்பி திசா தெரிவித்தார். ஆனால் மணீஷ் காஷ்யப் பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாட்னா மருத்துவ கல்லூரி முதல்வர் வித்யாபதி சவுத்ரி கூறினார்.
The post பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டரிடம் அத்துமீறிய பா.ஜ நிர்வாகிக்கு தர்ம அடி: வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பியவர் appeared first on Dinakaran.