தேங்கிய தண்ணீர்… ரசிகர்கள் கண்ணீர்: நின்று ஆடிய பெருமழையால் நின்று போன ஐபிஎல் போட்டி

பெங்களூரு: இந்தியா – பாக். இடையே போர் மேகங்கள் கலைந்ததால் நேற்று பெங்களூருவில் மீண்டும் துவங்க இருந்த ஐபிஎல் போட்டி, மழை நின்று ஆடியதால் கைவிடப்பட்டது.ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர், 57 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே திடீரென போர் சூழல் உருவானதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின், இரு தரப்பிலும் போர் நிறுத்தம் செய்யப்பட்டதால், மே 17ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் துவங்கும் என பிசிசிஐ அறிவித்தது. 58வது லீக் போட்டி பெங்களூருவில் நடக்கும் என்றும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்கவிருந்த நிலையில், மாலை 6 மணிக்கு பின் மழை பெய்யத் துவங்கியது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் பிட்ச் மழையில் நனையாமல் மூடி மறைக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. 10 நாள் இடைவெளிக்கு பின் போட்டியை காண ஆர்வத்துடன் வந்த பெங்களூரு ரசிகர்கள், போட்டி துவங்காததால் கண்கலங்கியபடி காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் மழை விடாததால், போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இத்துடன் சேர்த்து, பெங்களூரு அணி 12 போட்டிகளில், 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. கொல்கத்தா 13 போட்டிகளில், 5 வெற்றிகளுடன், 12 புள்ளிகள் பெற்று 6ம் இடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டும் பாக்கி இருப்பதால், பிளே ஆப்புக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அதேசமயம், பெங்களூரு அணிக்கு இன்னும் 2 போட்டிகள் இருப்பதால், முதல் இரு இடங்களில் ஒன்றை பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

 

The post தேங்கிய தண்ணீர்… ரசிகர்கள் கண்ணீர்: நின்று ஆடிய பெருமழையால் நின்று போன ஐபிஎல் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: