ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.75 சதவீதம் தேர்ச்சி: 11ம் வகுப்பில் 92.93 சதவீதம் தேர்ச்சி

ராமநாதபுரம், மே 17: ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.75 சதவீதமும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.93 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்.15ம் தேதி முடிவடைந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 மையங்களில் 138 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ராமநாதபுரம் மாதிரி பள்ளி ஒன்று என 260 பள்ளிகளிலிருந்து 7862 மாணவர்களும், 8195 மாணவிகளும் என மொத்தம் 16,057 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 7202 மாணவர்கள், 7,851 மாணவிகள் என 15053 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 91.61 சதவீதம், மாணவிகள் 95.80 சதவீதம் என மொத்தம் 93.75 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 138 அரசு பள்ளிகளில் 47 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு:
இதனை போன்று 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி மார்ச் 27ம் தேதி முடிவடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வில், 64 மையங்களில் 71 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ராமநாதபுரம் மாதிரி பள்ளி ஒன்று என 161 பள்ளிகளிலிருந்து, 6925 மாணவர்களும், 7433 மாணவிகளும் என மொத்தம் 14,358 பேர் தேர்வு எழுதினர். இதில் 6183 மாணவர்கள், 7160 மாணவிகள் என 13,343 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில் மாணவர்கள் 89.29 சதவீதம், மாணவிகள் 96.33 சதவீதம் என மொத்தம் 92.93 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 71 அரசு பள்ளிகளில் 4 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.75 சதவீதம் தேர்ச்சி: 11ம் வகுப்பில் 92.93 சதவீதம் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: