மதுரை, மே 17: பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்ட குழாயை, வீட்டிலிருந்து மைய குழாயுடன் இணைப்பதில் கசிவு ஏற்படுவதை தடுக்க ‘எலெக்ட்ரோ பியூசன்’ முறை என்ற நவீன முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கென மாநகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்றுள்ளதுடன், பகுதி வாரியாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி குறைந்தது 30 நிமிடங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்து, குழாயில் ஏற்படும் கசிவு, தண்ணீர் செல்லும் வேகம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் இணைப்பு கொடுக்கப்பட்டு வரும் நீலநிற குழாய்கள், சில இடங்களில் முறையாக வீடுகளுடன் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் இணைப்புகளில் இருந்து குடிநீர் கசிந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாக புகார் எழுந்துள்ளது. இவற்றை சரி செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், வீட்டிருந்து தெருப்பகுதியில் பூமிக்கு அடியில் பதித்த மைய குழாய் இணைப்புகளில் கசிவு ஏற்பட்டால், பல லட்சம் லிட்டம் குடிநீர் வீணாகும் நிலை ஏற்படும். எனவே, இதனை தவிர்க்கும் வகையில் நவீன இயந்திரம் மூலம் ‘எலெக்ட்ரோ பியூசன்’ முறையில் மைய குழாயுடன் இணைக்கப்படுகிறது. இது குறித்து இத்திட்ட அதிகாரி ரமேஷ் கூறும்போது, ‘‘பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் பல்வேறு பிரிவுகளாக வேகமடைந்துள்ளன.
இதன்படி புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட இடங்களில் பகுதி வாரியாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. வீடுகளில் எளிதாக மாற்றிக் கொள்ள வசதியாக நீல நிற குழாய்களில் திருகு குழாய் அமைப்புகள் பொருத்திக் கொள்ளலாம். அதேநேரம் பூமியின் மைய குழாயில் இணைப்பதை முழுமையாக ‘எலெக்ட்ரோ பியூசன்’ என்ற முறையில் நவீன இயந்திரத்தால் செய்யப்படுகிறது. இதனால் ஒரு போதும் தண்ணீர் கசிவு ஏற்படாது. இந்த இணைப்புகள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, அப்பகுதிகளில் புதிய சாலை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம்’ என்றார்.
The post எலெக்ட்ரோ பியூசன் முறையில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கசிவில்லா குழாய் இணைப்புகள்: திட்ட அதிகாரி தகவல் appeared first on Dinakaran.