சென்னையில் ஒரேநாளில் 8 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் திருச்சி, தூத்துக்குடி, மதுரை, சிவமுகா ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னையில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை 11.15 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பிற்பகல் 2.10 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகா செல்லும் தனியார் பயணிகள் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய 4 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், சென்னைக்கு பகல் 1.10 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவமுகாவிலிருந்து சென்னை வரும் தனியார் பயணிகள் விமானம், பிற்பகல் 2 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 3.25 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மாலை 5.40 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் என 4 வருகை விமானங்களம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் ரத்து குறித்து முன்னதாக அறிவிப்பு எதுவும் செய்யப்படாததால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘இந்த 8 விமானங்கள் நேற்று நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டன. இதுகுறித்து அந்த விமானங்களில் பயணம் செய்ய இருந்த பயணிகளுக்கு தனித்தனியே விமான நிறுவனங்கள் அறிவிப்பு செய்து, அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post சென்னையில் ஒரேநாளில் 8 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: