பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், இது குறித்து நேற்றே (நேற்று முன்தினம்) அறிக்கை வெளியிட்டுள்ளேன். மேலும், இது தொடர்பாக மற்ற மாநில முதலமைச்சர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். ஒன்றிய அரசு தொடர்ந்து ஆளுநர் பிரச்னையில் மட்டுமின்றி, அனைத்து பிரச்னைகளிலும் சர்வாதிகார போக்கை கடைபிடித்து வருகிறது. 2026 மட்டுமின்றி 2031-லும், அதைத்தொடர்ந்து 2036-லும் திராவிட மாடல் ஆட்சிதான் தமிழகத்தில் தொடரும். குன்னூரில் ஹாக்கி மைதானம் அமைப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர், ‘‘அது அவரது கருத்து’’ என்று கூறினார். பேட்டியின்போது, நீலகிரி எம்.பி. ஆ.ராசா உடன் இருந்தார். தொடர்ந்து, காலை 10.30 மணி அளவில் ஊட்டி தமிழகம் மாளிகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். மேலும், அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். காலை 11.30 மணி அளவில் ஊட்டி தமிழகம் மாளிகையில் இருந்து முதல்வர் புறப்பட்டார்.
அப்போது, தமிழகம் மாளிகை சாலையில் ஏராளமான பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் சாலையின் இரு புறங்களிலும் நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை வழங்கினர். தமிழகம் மாளிகை நுழைவாயில் பகுதியில் இருந்து சிறிது தூரம் நடந்து சென்று பொதுமக்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து கைகுலுக்கினார். அப்போது அங்கு காத்திருந்த சிலர் அவருக்கு யானை பொம்மையை பரிசளித்தனர். தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் சென்றார். பின்னர் மாலை மேட்டுபாளையத்தில் இருந்து கோவை சென்றவர், நேற்று இரவு விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார்.
The post 2026 மட்டுமின்றி 2031, 2036லும் திராவிட மாடல் ஆட்சி தொடரும்: ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.