கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே 33 ஏரிகளுக்கு, ரூ.88 கோடி மதிப்பில் புதிய நீர்வரத்து கால்வாய் வெட்டும் பணிகளை, விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி ஆறு, தேன்கனிக்கோட்டைக்கு தென்மேற்கு பகுதியில் உள்ள பிலிகுண்டுலு என்ற இடத்தில் நுழைந்து, ஒகேனக்கல்லை சென்றடைகிறது.
தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி அணைக்கு வந்து, அங்கிருந்து தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.ஆர்.பி.அணை, சூளகிரி அருகில் உள்ள சின்னார் அணை, ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை மற்றும் பாரூர் பெரியஏரி போன்றவை உள்ளது.
இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் 46,965 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள நெடுங்கல் அணையில் இருந்து, பாரூர் ஏரிக்கு தண்ணீர் கால்வாய் வழியாக செல்கிறது. மேலும், பாரூர் ஏரி கிழக்கு பிரதான கால்வாய் இருந்து, 15.87 கி.மீ தூரத்திற்கு ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் உள்ள 33 ஏரிகள், 8 தடுப்பணைகளுக்கு, தண்ணீர் கொண்டு சென்று நிரப்பிட, புதிய நீர்வழங்கு கால்வாய் ரூ.88 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் நீர் தேவை 83.71 மில்லியன் கனஅடி ஆகும். இந்நீரை 22 நாட்களில் கால்வாய் வழியாக கொண்டு சேர்க்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி அருகே தாதம்பட்டி ஊராட்சி, பூதனூர் என்னுமிடத்தில் 800 மீட்டருக்கு தொட்டிப்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் மூலம் 1,341 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளின் நீர்மட்டம் உயரும். குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். பாசன வசதிகள் விரிவாக்கம் பெறும். விவசாயம் பெருகுவதன் மூலம் வேலைவாய்ப்பு பெருகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் உயரும். இந்த புதிய நீர்வழங்கு கால்வாய் வெட்டும் பணிகள், கடந்தாண்டு மார்ச் 9ம் தேதி தொடங்கியது. இதுவரை சுமார் 68 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இந்த புதிய நீர்வழங்கு கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியை துரித்தப்படுத்த வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ள பெரும்பாலான கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதுடன், விவசாய விளை நிலங்களின் பரப்பளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் இப்பகுதியில் உள்ள மா, தென்னை மரங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும். எனவே, இந்த பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்,’ என்றனர்.
The post 33 ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய் வெட்டும் பணி appeared first on Dinakaran.