பெரம்பலூரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

பெரம்பலூர், மே.11: பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான லக்ஷ்மி, மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஆய்க்குடி, துங்கபுரம், கீழப் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநருமான லக்ஷ்மி, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவில் நீர்வளத் துறையின் சார்பில் சிறப்பு தூர்வாருதல் பணிகளில் கீழ் ஆயக்குடி ஏரியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 1கி.மீ தொலைவிற்கு வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி, துங்கபுரம் ஊராட்சியில் உள்ள ஆணைவாரி ஓடையில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் 1கி.மீ தொலைவிற்கு தூர் வாருதல் பணி மற்றும் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 1,000 மீட்டர் நீளம் நரி ஓடையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் அகற்றி, பக்க கரைகளை வலுப்படுத்தி, தூர்வாரும் பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன்பே முடிக்க வேண்டும் எனவும், திட்ட மதிப் பீட்டில் உள்ளவாறு பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் நீர்வளத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில், மாவட்டக் கலெக்டர் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை பொதுப் பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தோட்டக் கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகளிர் திட்டம், பள்ளிக் கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து, பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விரிவாக ஆய்வு மேற் கொண்டார்.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வேளாண்மை இணை இயக்குநர் பாபு, கூட்டுறவு இணை சங்கங்கள் இணைப் பதிவாளர் பாண்டியன், பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ)வைத்தியநாதன், நீர்வளத் துறை செயற்பொறியாளர் பாண்டியன், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணசேகரன், ஊராட்சி உதவி இயக்குநர் செல்வம், உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: