ஸ்ரீமத் ராமானுஜர் மனிதகுலம் சிறக்க வந்த மாமணி. மகா புருஷர் மனித குலத்தை வாழ்விக்க வந்த உத்தமர். அனைத்துலகும் வாழ வழி செய்தவர். மக்களின் துன்பங்களைத் தன் துன்பங்களாகப் பார்த்தவர். தாம் 18 தடவை நடந்து, திருக்கோட்டியூர் நம்பி களிடம் கேட்ட ரஹஸ்ய அர்த்தத்தைத் திருக்கோட்டியூர் கோபுரத்திலிருந்து உலகோர் உய்ய ஆசையுடையோர்க்கெல்லாம், அருளிச்செய்தார்.
இது ஏதோ மந்திரத்தைக் கோபுரம் மீது ஏறிச் சொன்னார் என்கிற விஷயமாக மட்டும் பார்க்கக்கூடாது. என்ன மனநிலையில் எந்த நோக்கத்தில் சொன்னார் என்பதைப் பார்க்க வேண்டும். இது மட்டுமல்ல: வேறு பல காரியங்களையும் தமது வாழ்நாள் முழுக்க சோர்வறியாது மக்களின் துயர் துடைக்கச் செய்திருக்கிறார்.
மக்களின் நல்வாழ்வுக்காகத் தொண்டனூரில் ஏரி வெட்டச் செய்தார். ஊமைக்கும் உய்வு பெற தன் திருவடி ஸம்பந்தம் கொடுத்தார். எம்பெருமானார்க்கு சாதி, மத, ஆண் பெண் பாகுபாடின்றி எழுநூறு சீடர்களுக்கு மேலிருந்தனர். அவர்களில் 160 அந்தணர்கள், 41 தாஸர்கள், 50 பெண் மணிகள் குறிப்பிடத்தக்கவர்கள் என்கிறது “குருபரம்பராப்ரபாவம்’’ எனும் நூல். அவர் தன் காலத்திலேயே வைணவம் என்றும் மங்காதிருக்க எழுபத்தி நான்கு சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிம்மாசனாதிபதிகள் என்று பெயரிட்டு நாடெங்கும் பரவி வைணவக் கருத்துக்களை பரப்பச் செய்தார்.நவமணிகளாக ஒன்பது நூல்களை அருளிச் செய்திருக்கிறார். இவர் எழுதிய நூல்கள்.
1) வேதார்த்தஸங்க்ரஹம் (ஸ்ரீபாஷ்யத்திற்கு நுன்முகம்)
2) ஸ்ரீபாஷ்யம்
3) ஸ்ரீபகவத்கீதா பாஷ்யம் (பகவத் கீதை மிகத் தெளிவான விளக்கவுரை)
4) வேதாந்தஸாரம்
5) வேதாந்த தீபம் (இவ்விரு நூல்கள் ஸ்ரீ பாஷ்யச் சுருக்கங்கள்)
6) நித்யம் (ஒரு வைணவன் தினசரி செய்ய வேண்டியவைகள்)
7) சரணாகதிகத்யம்
8) ஸ்ரீரங்க கத்யம்
9) ஸ்ரீவைகுண்ட கத்யம் ஆகியவை.
இவை யாவும் இன்றும் உரைகளுடன் காணக் கிடைக்கின்றன. இனி அவர் நூல்களின் சிறப்புக்களை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
வேதார்த்த ஸங்க்ரஹம்
ஸ்ரீமத் ராமானுஜர் அருளிச்செய்த 9 கிரந்தங்களில் முதலாவது வேதார்த்த ஸங்க்ரஹமாகும். இதனை ஸ்ரீராமானுஜர் திருமலையில் திருவேங்கடமுடையான் திருமுன்பு விண்ணப்பித்தார். வேதநெறியை நிலை நிறுத்தும் நூல்கள் மூன்று.
1) உபநிடதங்கள்.
2) கீதை.
3) பிரம்ஹஸூத்ரம்.
இம்மூன்றிற்கும் முச்சான்றுகள் (பிரஸ்தானத்ரயங்கள்) என்று பெயர்.
“ஸங்க்ரஹம்’’ என்றால் சுருக்கம்.இந்நூல் பல உபநிஷத்துக்களின் உட் கருத்துக்களையும் கொண்டுள்ளது. இந்த நூலின் திரண்ட கருத்து எல்லாப் பொருள்களைக் காட்டிலும் ஒப்புயர்வற்ற வடிவத்தை உடையதாய், அளவற்ற கல்யாண குணங்கள் உடைய பரமாத்மா என்பவன் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ் ஆகிய ஆறு குணங்கள் உடையனாய், லீலா விபூதி நித்ய விபூதி ஆகிய உபயவிபூதியும் உடையவனாய் இருக்கிறான். அவன் வேறு யாருமல்ல. நாராயணன் என்னும் புருஷோத்தமனே என்பதே இந்நூலின் மையக் கருத்தாகும்.
ஸ்ரீபாஷ்யம்
இந்த வேதாந்த சங்க்ரஹத்தில் சொல்லப்பட்டதன் மிகப்பெரிய விரிவே ஸ்ரீபாஷ்யம். ஸ்ரீ ராமானுஜர் அருளிய நூல்களிலேயே மிகப் பெரியதும் ஸ்ரீ பாஷ்யம்தான். ஸ்ரீ பாஷ்யத்தை அனுசரித்தே மற்ற நூல்களை அருளிச்செய்திருக்கிறார். ஸ்ரீராமானுஜரை ஸ்ரீ பாஷ்யக்காரர் என்று சரஸ்வதி தேவியே கொண்டாடும்படியாக அமைந்த காலத்ததால் அழியாத உயர்ந்த நூல் ஸ்ரீபாஷ்யம். ஸ்ரீ வயாசர் அருளிய பிரஹ்ம சூத்ரத்திற்கு ஸ்ரீராமானுஜர் அருளிச் செய்த உரைவிளக்கம்தான் ஸ்ரீபாஷ்யம் எனப்படும். கடவுளிலிருந்துதான் உலகம் தோன்றியது என்பது வேதமதம். கடவுளிலிருந்து உலகம் உண்டாகிறது என்ற கொள்கையில் ஏற்படும் தடைகளுக்கு விடைகளை விவரிப்பதே பிரஹ்ம சூத்ரங்கள். அவை மொத்தம் 545, நாம் இருக்கிறோம். உலகம் இருக்கிறது. அதாவது உலகத்தில் நாம் இருக்கிறோம்.
இப்போது கேள்வி: இந்த உலகம் யாரால் படைக்கப்பட்டது? நாம் யாரால் படைக்கப்பட்டோம்?
நாம் பெற்றோரிடமிருந்து தோன்றினோம் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது. பெற்றோருக்கு பெற்றோர் என்று ஆதித்தோற்றத்துக்கு கேள்வி போகும்.சரி. உலகத்தையும் நம்மையும் கடவுள் படைத்தார் என்று சொல்லிவிடலாம். அது எளிதுதான்.
ஆனால் கடவுள் யார்? ஏன் படைத்தார்? அவர் படைத்தார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?
பொதுவாக கடவுளிடமிருந்து எல்லாம் தோன்றியது என்பதை எல்லோரும் எற்றுக்கொள்கிறார்கள். ஆனால் எப்படி என்ற கேள்விக்கு யாரும் தெளிவான விடையைச் சொல்வது இல்லை. இந்தக் கேள்விகளுக் கெல்லாம் தர்க்க ரீதியாக பதில் சொல்லும் நூல்தான் ஸ்ரீபாஷ்யம்.இச்சூத்ரங்கள் நான்கு அத்யாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்யாயமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாதத்திலும் உட்பிரிவுகள் உள்ளன. அவை அதிகரணங்கள் எனப்படும். வேதவாக்யம் ஒன்றை எடுத்து ஆராய்ந்து அதன் சரியான பொருளை நிர்ணயம் செய்வதே அதிகரணம் எனப் படும். 156 விஷயங்களை நிர்ணயம் செய்வதால் 156 அதிகரணங்கள் உள்ளன. ப்ரம்ஹ சூத்ரங்களுக்கு பதின்மூன்று மகான்கள் பாஷ்யம் எழுதி இருக்கின்றனர்.
ராமானுஜருக்கு முன்பு விசிஷ்டாத் வைதக் கொள்கையின்படி பிரஹ்ம சூத்ரங்களுக்கு பகவத் போதயனரால் விருத்தி உரை வரையப்பட்டுள்ளது. அது மிகவும் விரிவானது. அதனை டங்கர், த்ரமிடர், குஹதேவர் போன்றோர் சுருக்கமாக எழுதியுள்ளனர். ஆனால் அவ்வுரைகள் கிடைக்கவில்லை. காலப்போக்கில் மறைந்துவிட்டன. இக்குறையினை நீக்க ஸ்ரீ ஆளவந்தார் நியமனப்படி, போதாயனர் முதலியோர் எழுதிய விருத்தியுரையைப் பின்பற்றி ராமானுஜர் தாம் வியாச சூத்ரங்களுக்கு
ஸ்ரீபாஷ்யம் எழுதுவதாகத் தெரிவிக்கிறார்.
வேதாந்த தீபம்
ஸ்ரீராமானுஜரின் மூன்றாவது நூல் வேதாந்த தீபம்.ஸ்ரீபாஷ்யத்திற்கு பிறகு பிரஹ்ம சூத்ரத்திற்கு மிகவும் எளிமையான உரையை ஸ்ரீராமானுஜர் அருளிச் செய்துள்ளார். இதனைச் சிறிய பாஷ்யம் என்று குறிப்பிடுவார்கள். ஸ்ரீ பாஷ்யத்தைப் போலவே வேதாந்த தீபம் நான்கு அத்யாயங்களைக் கொண்டது. 156 அதிகரணங்கள் உள்ளன. சூத்ரங்களின் எண்ணிக்கை 545. மிகவும் சுருக்கமான எளிமையான உரையே இதன் சிறப்பு.
வேதாந்த தீபத்தின் தனிச்சிறப்பு சில சூத்ரங்களுக்கு ஸ்ரீபாஷ்யத்திற் காட்டிலும் பொருள் விளக்கங்களை விரிவாக அளித்துள்ளதாகும். இதற்கு உதாரணமாக கடைசி சூத்ரமான அநாவ்ருத்திச் சப்தாத் அநாவ்ருத்திச் சப்தாத் என்ற சூத்ரத்தின் விளக்கம் ஸ்ரீபாஷ்யத்தைக் காட்டிலும் விரிவாகவும் சிறப்பாகவும் உள்ளது.
வேதாந்த ஸாரம்
ஸ்ரீமத் ராமானுஜர் அருளிய அடுத்த நூல் வேதாந்த ஸாரம்.முதலில் வேதாந்த ஸாரத்தை படித்து ஒரு ஆசாரியனிடம் கற்க வேண்டும். பின் வேதாந்த தீபத்தைப் படிக்க வேண்டும். நிறைவாக ஸ்ரீபாஷ்யத்தைத் தகுந்த ஒரு ஆசாரியனிடத்திலே பணிந்து கேட்டு, முழுமையாக அறிய வேண்டும். காரணம், ஸ்ரீ பாஷ்யத்தின் ஏற்றமிகு கருத்தை அவ்வளவு எளிதாக உணரமுடியாது. வேதாந்த ஞானமும் வடமொழிப் புலமையும் வேண்டும். குறிப்பாக பதம்பதமாகப் பிரித்து ஆராயும் மொழித்திறனும் வியாகரணம், தர்க்கம், நியாயம் முதலியவைகளில் புலமையும் அவசியம். இப்படி ஆழ்ந்த ஞானமில்லாதவர்களுக்காகவே அருளிய நூல் வேதாந்த ஸாரம்.
இந்த நூலிலும் 545 பிரம்ம சூத்ரங்களுக்கும் மிக எளிய உரையாக, அனைவரும் எளிதில் கற்கும்படியாக அருளிச் செய்துள்ளார். இதிலும் பரமாத்மாவைப் பற்றி வேத வாக்கியங்களைக் கொண்டு விளக்குகிறார். தைத்தரீய உபநிஷத்தில் ஞானமேயான ஜீவனைக் காட்டிலும் அவனுக்கு அந்தர்யாமியான ஆத்மா வேறு. அவன் ஆனந்த மயன் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ஆனந்தமயன் ஜீவாத்மாவா? பரமாத்மாவா என்ற கேள்வி ஏற்பட்டு பதில் பரமாத்மாவே என்று சித்தாந்தம் செய்யப்படுகிறது.
ஆனந்தமயன் மற்றவர்களுடைய ஆனந்தத்திற்குக் காரணமானவன் என்று உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது இவனே மற்ற ஜீவன்களை ஆனந்திப்பிக்கிறான் என்று கூறுவதால், ஆனந்தமயன் ஜீவன் அல்ல. பரமாத்மாவே என்று தெளிவிக்கிறது. இதைப் போல பல அற்புதமான கருத்துக்கள் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன.
ஸ்ரீ பகவத் கீதா பாஷ்யம்
ஸ்ரீராமானுஜரின் 5வது நூல் ஸ்ரீ பகவத் கீதா பாஷ்யம். சகல உபநிஷத்துக்களின் சாரம் பகவத் கீதை என்பதை எல்லா அறிஞர்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பகவத் கீதைக்கு பலர் உரை அருளிச் செய்திருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீ ராமானுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை அனுசரித்து உரை அமைத்திருக்கிறார். பிரஹ்ம சூத்ரத்தில் இறைவனை பிரஹ்மம் என்று சொல்லப் பட்டுள்ளதேயன்றி, அவன் பெயரை ஸ்பஷ்டமாகச் சொல்லவில்லை.
ஆனால் பகவத் கீதையில் கண்ணனாக அவதரித்த ஸ்ரீமந் நாராயணன் நானே பரதெய்வம் என்று பல இடங்களில் சொல்லியிருப்பதால், பரம் பொருள் ஸ்ரீமந் நாராயணன் எனும் கண்ணனே என்று தெளிவாகச் சொல்லப்பட்டது. ஸ்ரீபாஷ்யத்தில் தாம் நேரடியாக சொல்ல முடியாத விஷயங்களை கீதா பாஷ்யத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஸ்வாமி ராமானுஜர் ஆழ்வார்களும் ஆசார்யர்களும் ஆதரித்த அர்த்தங்களை விளக்க பகவத் கீதையை மிக அழகாக பயன்படுத்திக் கொண்டார். பகவத் கீதையின் மிக முக்கியமான ஸ்லோகம் இது. இதற்கு ராமானுஜர் தரும் விளக்கம் வேறு யாரும் தராதது. பகவத் கீதையின் சாரமான கருத்தை விளக்குவது.
“ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம்
சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி மா சுச:’’
கர்மத்தைச் செய்யும்போது, தன்னைச் செய்பவனாகவும், (கர்த்ருத்வம்), அந்தச் செயல் தன்னுடையது (மமதை) என்றும் அந்தச் செயலின் பயன் தனக்கு என்றும் எண்ணாமல் பகவானே அவற்றைச் செய்விப்பவன் (கர்த்தா). அச்செயல் பகவானைச் சேர்ந்ததே. அச்செயலால் அமையும் பயனும் பகவானுடையதே என்ற நினைவோடே செய்ய வேண்டும். அப்படிச் செய்பவனுக்குத் தடையாக இருக்கிற பாபங்கள் அனைத்தையும் நான் போக்கி விடுகிறேன். கவலைப்படாதே என்று அர்ஜூனனுக்குக் கண்ணன் கூறுகிறான்.
அர்ஜூனனைப் பார்த்து, மாசுச: கலங்காதே என்கிறான் கண்ணன். இங்கு அர்ஜுனனின் கலக்கம் என்ன? பக்தி செய்தால் என்னையே அடைவாய் என்கிறானே கண்ணன். நமக்கோ பாபம் அதிகம். நம் பாவங்கள் போனாலன்றோ நமக்கு பக்தி உண்டாகும்.பாபத்தை அனுபவித்துப் போக்கிக் கொள்ளலாம் அல்லது சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டபடி அதற்கான பிராயச் சித்தங்களைச் செய்து போக்கிக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் நம்மால் ஆகாதது. என்ன செய்வது? என்று கலக்கம் ஏற்பட்டது அர்ஜுனனுக்கு.
உன் பாபம் விலக, சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட எல்லா பிராயச்சித்த தர்மங்களையும் விட்டுவிட்டு, ஸர்வ பாப பிராயச்சித்தமாக என்னை ஒருவனையே பற்று. நான் உன் பாபங்களைப் போக்கு கிறேன். கலங்காதே என்கிறான். இதனால் முதல் யோசனையில் கர்த்ருத்வம், மமதை, பலன் இவைகளைவிட்டு, கர்ம, ஞான, பக்தியைச் செய் என்பது பொருள். இரண்டாம் யோசனையில் பக்திக்குத் தடையான உன் பாபங்கள் நீங்க, நீ செய்ய வேண்டிய பிராயச் சித்தங்களை விட்டு, என்னை ஒரு வனையே பற்று என்பது பொருள். இப்பொருளைப் புரிந்துகொண்டால் கீதையின் முழுப் பொருளையும் புரிந்து கொள்ளலாம்.
சரணாகதி கத்யம்
ஒரு பங்குனி உத்தரத் திருநாளில் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் சேர்த்தியில் உலகோருக்காக பெரிய பெருமாளிடம் பெரிய பிராட்டியாரை முன்னிட்டுக் கொண்டு தாமே பரம கருணையோடு சரணாகதி செய்து வேண்டினார். சரணாகதி செய்யும்போது பெரிய பிராட்டியோடிருந்த பெரிய பெருமாளுக்கும் ஸ்ரீ ராமானுஜருக்கும் நடந்த ஸம்வாதமே கத்யத்ரயம் என்று வழங்கப்படுகிறது. கத்யத்ரயம் அதாவது திரயம் + கத்யம். மூன்று கத்யங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். இவை முறையே சரணாகதி கத்யம். ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ வைகுண்ட கத்யம் ஆகும். முதல் கத்யமான சரணாகதி கத்யம் 24 சூர்ணைகளை உடையது.
பிராட்டியின் புருஷகாரத்தைப் பெற்ற ஸ்ரீ ராமானுஜர் அடுத்து எம்பெருமானிடம் தன்னுடைய சரணாகதியைத் தெரிவிக்கிறார். மகன் குற்றத்தைத் தகப்பன் பொறுப்பது போலவும், நண்பனுடைய தவறை நண்பன் பொறுப்பது போலவும், அன்பனான என் பொருட்டு எனக்கு அன்பரான நீர் என் பிழைகளைப் பொறுத்தருள வேணும் என்று வேண்டி, தன்னுடைய பிழைகளை விவரிக்கிறார்.
இப்படிச் சரணாகதியைச் செய்தவுடன், பெருமாள் சோதிவாய் திறந்து எல்லா நிலைகளிலும், எல்லாவிதமான தொண்டு களிலும் ஆசை கொண்டு, நித்ய கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்றவராக ஆகப்போகிறீர் என்று உறுதி கொடுத்ததைச் சொல்லி நிறைவுசெய்கிறார்.
ஸ்ரீரங்க கத்யம்
இரண்டாவது கத்யமான ஸ்ரீரங்க கத்யத்தில் ஸ்ரீரங்கநாதரே! உம்முடைய திருவருளால் அடியேன் தகுதி படைத்தவனாக நினைத்திருக்கிறேன். ஒரு சமயம் அப்படிப்பட்ட தகுதி இல்லையேயானாலும், அடியேன் சொல்லுகின்ற வார்த்தையையே காரணமாகக் கொண்டு என் பிரார்த்தனையை நீரே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதில் அழகான அடுக்கடுக்கான பதங்களால் ஸ்ரீரங்கநாதனின் வடிவையும் குணத்தையும் போற்றுகிறார்.
வைகுண்ட கத்யம்
ஸ்ரீரங்கநாதர் தரும் பெரும் பதம் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கும் நூல் இது. இந்த விவரணங்கள் எந்த நூல்களிலும் இல்லாதது. ஈரேழு பதினான்கு உலகங்களைக் கொண்ட அண்டத்தையும் அதனைச் சூழ்ந்திருந்து ஒன்றிலிருந்து மற்றொன்று பெரியதாகத் தோன்றும் பத்து மடங்கு அதிகமாயுள்ள ஏழு மதிள்களையும் மற்றுமுள்ள அனைத்து காரிய காரண வர்க்கங்களையும் கடந்து, அப்பால் விளங்குவதும், பரமாகா சமென்று சொல்லப்படுகிற பிரமன் முதலியோருடைய வாக்குக்கும், மனதுக்கும் எட்டாத ஸ்ரீ வைகுண்ட திவ்யலோகத்தில், ஸனகர், பிரம்மருத்ரர் முதலியவர்களுக்கும் நினைக்க முடியாத செல்வங்களை இயல்பாக உடையராய், இருப்பதை விவரிக்கிறார்.
நித்யம்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குச் சொல்லப்பட்ட விதிகளில் பஞ்சகால பாராயணத்வம் முக்யமானது. சூர்ய உதயம் முதல் அஸ்தமனம் வரை உள்ள முப்பது நாழிகையை ஐந்து பாகமாகக் கூறிட்டு, ஒவ்வொரு ஆறு நாழிகையை ஒவ்வொரு காலமாகக் கொண்டு.
1. அபிகமனம்,
2) உபாதானம்,
3) இஜ்யா,
4) ஸ்வாத்யாயம்,
5) யோகம் என்ற ஐந்து வகைப்பட்ட அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும்.
பின்னால் வந்த திருவாராதனக்கிரமம் போன்ற நூல்களுக்கு இது மூல நூல். இன்று வைணவர் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் இந்த முறையை ஒட்டியே வழிபாடு நடைபெறுகிறது. இப்படி ராமானுஜர் தம் நூல்களின் மூலம் இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டியிருக்கிறார். இவற்றை அறிந்து கொண்டு அதன் முழுமையான பலனைப் பெற அவர் திருவடிகளே துணையாகப் பற்ற வேண்டும். வாழ்க ராமானுஜரின் திருப்புகழும், திருவருளும்!
முனைவர் ஸ்ரீராம்
The post நவமணிகள் தந்த ராமானுஜர் appeared first on Dinakaran.