சில தலங்களில் இவரை வில்லேந்திய வேலவராகவும் அமைந்துள்ளனர். சோழ நாட்டுத் தலங்கள் பலவற்றில் முருகன்வில்லேந்திய வேலவனாகவே காட்சி தருகிறான். இவரை தனுசு சுப்பிரமணியர் என்றும் அழைக்கின்றனர்.திருக்கடையூர் மயானம், மயிலாடுதுறை போன்ற திருத்தலங்களில் வில்லேந்திய வேலவனைக் காண்கிறோம். பெரிய ஆலயங்களில் கல்யாணசுப்பிரமணியர் இருந்தாலும் தனியே ஆறுமுக சுவாமியும் இருபெரும்தேவியருடன் இருக்கக் காண்கிறோம். இவர் பிராகாரத்தின் வடகிழக்கு முனையில் அல்லது வடமேற்கு முனையில் தெற்கு நோக்கியவாறு சபா மண்டபத்தில் காட்சி தருகிறார். வைகாசி விசாக நாளில் இவருக்குப் பெரிய அளவிலான மகா அபிஷேகமும் இரவில் திருவீதியுலாவும் நடத்தப்படுகின்றன.
வைகாசி விசாக நாளில் சண்முகர் தேவேந்திர விமானத்தில் பவனி வந்து அன்பர்களுக்குக் காட்சி தருகிறார். அடுத்த படியாக, பழனி தண்டாயுதபாணியின் திருவுருவம் அழகிய உலாத் திருமேனியாக அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திரத்தில் இவருக்கு காவடி எடுத்து விழா கொண்டாடுகின்றனர். சில தலங்களில் செல்வமுத்துக் குமரன் என்னும் பெயரிலான முருகனின் வடிவத்தையும் காண்கிறோம். இவர் தனது இடது காலை நிலத்தில் பதித்து, வலதுகாலை மயில் மீது ஊன்றியவாறு நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர் தனது மேற் கரங்களில் வஜ்ஜிரம், சக்தி ஆயுதங்களை ஏந்தி முன்கரங்களில் வில்லையும் அம்பையும் தாங்கியுள்ளார் கந்தர் சஷ்டியில் வீதியுலா காணும் மூர்த்தியாக இவர் விளங்குகிறார். இவரது திருவடியைத் தாங்கி நிற்கும் மயில் நம்மை நோக்கி நிற்கின்றது.
மேலும், விழாக்களில் முருகனுடன் பவனி வரும் துணைத் தெய்வங்களாகச் சுமந்தரீசுவரர் எனப்படும் குகச்சண்டி, நவவீரர்கள், அவர்களில் முதல்வனான வீரபாகுதேவர், இடும்பன், சக்தி ஆயுதம் போன்ற உலாத் திருமேனிகளும் ஆலயங்களில் இடம்பெற்றுள்ளன.சில தலங்களில் பாலசுப்பிரமணியர் வடிவமும் வழிபாட்டில் இருக்கிறது சில தலங்களில் மயில்மீது அமர்ந்த கோலத்திலும் அவர் காட்சி தருகிறார். இவற்றைத் தவிர பஞ்சமூர்த்திகளில் முதன்மை பெற்ற சிவவடிவமான சோமாஸ்கந்தர் வடிவில் முருகன் சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் அழகிய குழந்தையாகக் குதித்தாடும் கோலத்திலும் இருக்கிறார்.
The post சிவாலயங்களில் அமைந்துள்ள முருகனின் உலாத்திருமேனிகள் appeared first on Dinakaran.