காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தவும் இந்தியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கக் கூடும் என உளவுத்தகவல் கிடைத்திருப்பதாக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவரும் கூறி உள்ளார். இந்நிலையில், பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கித், ஸ்கார்டு மற்றும் பிற வடக்கு பகுதிகளுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தேசிய விமான நிறுவனம் ரத்து செய்தது.
இதைத்தொடர்ந்து, முக்கிய நகரங்களான கராச்சி, லாகூரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தினமும் அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை 4 மணி நேரத்திற்கு வான்வெளியை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 1 முதல் மே 31 வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் அந்த சமயத்தில் பயணிகள் விமானங்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், பாதுகாப்பு, கண்காணிப்பு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வான்வெளி வழியாக செல்லும், புறப்படும் விமானங்களை இயக்கும் அனைத்து வெளிநாட்டு விமான நிறுவனங்களையும் கடுமையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முறையான ஆவணம், அடையாள சான்று இல்லாமல் எந்த பயணியையும் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவுகள் பறக்கின்றன.
The post போர் பயத்தில் பாகிஸ்தான் கராச்சி, லாகூர் வான்வெளி தினமும் 4 மணி நேரம் மூடல்: விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை appeared first on Dinakaran.