தென் மாவட்டங்களில் திருவிழா தொலைதூர மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள்

திருப்பூர்: பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் நிறைந்த நகரமான திருப்பூரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறையில் திருப்பூரில் தங்கி உள்ள வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இதற்காக கோடை விடுமுறை காலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பூரிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் மதுரையில் சித்திரை திருவிழா நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இனி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடைபெறக்கூடிய நிலையில் மே 6ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், மே 9ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மே 12ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும். இதில், கலந்து கொள்வதற்காக திருப்பூரில் இருந்து தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஏராளமானோர் மதுரைக்கு செல்வது வழக்கம். இதனால், நேற்று முதல் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில்,“கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது மட்டுமல்லாது தென் மாவட்டங்களான மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் நிகழ்ச்சி, கிருத்திகை முன்னிட்டு திருச்செந்தூர் செல்பவர்கள் ஆகியோரின் வசதிக்காக திருப்பூரிலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, இயக்கப்படும் பேருந்துகளைக் காட்டிலும் 5 முதல் 7 பேருந்துகள் தற்போது தொலைதூர தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து இவை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். திருப்பூரில் இருந்து எந்தவித நெரிசலும் இன்றி பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வர கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதோடு அதனை அதிகப்படுத்தவும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.

The post தென் மாவட்டங்களில் திருவிழா தொலைதூர மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் appeared first on Dinakaran.

Related Stories: