ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்!!

சென்னை: ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்ததுடன், தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டனர். இது தொடர்பாக ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில், ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடைவிதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைன் ரம்மி தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தது.

அதன்படி, ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த தமிழ்நாடு அரசு விதிமுறைகளை விதித்தது. இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடக்கூடாது என தமிழ்நாடு அரசின் விதிகளை எதிர்த்து, ப்ளே கேம்ஸ் 24*7, ஹெட் டிஜிட்டல் வொர்க்ஸ், எஸ்போர்ட் ப்ளேயர்ஸ் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்!! appeared first on Dinakaran.

Related Stories: