புழல்: நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலைதுறை சார்பில் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலை பணி நடைபெற்றது. அப்போது நாரவாரிகுப்பம் சுடுகாட்டில் இருந்த சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது சுடுகாட்டிற்கு சுற்றுச் சுவர் இல்லாத பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. மேலும் குப்பை கூலமாக சுகாதாரமற்று காட்சியளிக்கிறது. இதனால் சடலத்தை எரிக்க வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
மேலும் இதன் அருகே பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடம் உரிய முறையில் பராமரிப்பு இல்லாததால் அருகில் உள்ள பேரூராட்சி பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் உள்ளவர்கள், பொதுமக்கள், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் உடல்நிலை பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சுற்றுசுவர் அமைத்து, பராமரிப்பு இல்லாத கழிப்பிட வளாகத்தை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், இந்தப் பகுதியை குப்பைகள் இல்லாத சுகாதாரமான பகுதியாகவும் மாற்றி பொதுமக்களின் கோரிக்கையை உடனே உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post நாரவாரி குப்பம் பேரூராட்சியில் சுடுகாட்டை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.