தாய்மொழியைக்காக்க வடமாநிலங்களிலும் போராட்டம் இந்தி தெரியாது போடா… நாடு முழுவதும் பரவியது தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு தீ

மொழி ஓர் இனத்தின் அடையாளம்; கலாசாரம். மொழி அழிந்தால் கலாசாரமும் அழிந்து விடும். இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் அடையாளம். அதை சிதைக்க நடந்த எந்த முயற்சியும் வெற்றி பெற்றதே இல்லை என்பதை கடந்த கால வரலாறு மெய்ப்பிக்கிறது. இருப்பினும், மொழி, கலாசாரத்தை அழிக்கும் தாக்குதலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த தொடர்ந்து நெருக்கடி அளித்து வருகிறது. இதன்மூலம் நாடு முழுவதும் இந்தியை கட்டாயப்பாடம் ஆக்க வேண்டும் எனத் துடிக்கிறது ஒன்றிய பாஜ அரசு. எந்த நெருக்கடிகளுக்கும் அழுத்தத்துக்கும் அடிபணியாத தமிழ்நாடு அரசு, மும்மொழிக் கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இதனால், பொருளாதார நெருக்கடி கொடுத்து பணிய வைக்கும் முயற்சியாக, நிதியை விடுவிக்க மறுத்து வருகிறது ஒன்றிய அரசு. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் அந்த நிதியை விடுவிக்க முடியாது. புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதால் ரூ. 2,152 கோடி நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். பி.எம். பள்ளிகள் மட்டுமல்ல, தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக வேறு பல பிரச்னைகளும் தமிழக அரசுடன் உள்ளன என்றார். இது தமிழ்நாடு அரசின் மீது ஒன்றிய அரசு எந்த அளவுக்கு வெறுப்புக் காட்டுகிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பல முறை வலியுறுத்தியபோதும், ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கவே இல்லை. தமிழின் மீதும் தமிழ்நாட்டின் மீதும் அக்கறை உள்ளதாக காட்டிக் கொள்ளும் வகையில் திருக்குறள், அவ்வையார் பாடல்கள், பாரதியார் பாடல்களில் இருந்து அவ்வப்போது மேற்கோள் காட்டி வரும் பிரதமரின் செயல்கள் வாக்கு அரசியலுக்கான காய் நகர்த்தல்கள் தானா என்ற கேள்விகளையும் இது எழுப்பியது. ஆனாலும், அரசியல், பொருளாதார ரீதியாக எத்தனை நெருக்கடிகள் கொடுத்தபோதும் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழ்நாடு அரசு இடம் தரவே இல்லை. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் கல்விக்கு 55,261 கோடி ரூபாய் ஒதுக்கிய தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு நிறுத்திவைத்த ரூ.2,152 கோடியை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து வழங்குவதாக அறிவித்தது.

இதன்மூலம், இந்தித் திணிப்புக்கு ஒரு போதும் இடம் தர மாட்டோம் என்ற தனது நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது தமிழ்நாடு அரசு. மேலும், புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்தில் தொடங்கிய இந்தி எதிர்ப்பு தீ, வடமாநிலங்களையும் பற்றிக் கொண்டது. மும்பையில் மராத்தி பேச மறுத்து இந்தியில் பேசியவர்கள் மீது மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவினர் தாக்குதல் நடத்த தொடங்கினர். இந்த சூழ்நிலையில்தான் மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி, தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்த முடிவு செய்து, மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கின. கல்வியாளர்கள் எதிர்ப்பையும் மீறி, மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டியது.

1ம் வகுப்பு முதல் இந்தி கட்டாயப்பாடம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதற்கு மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உடனடி எதிர்ப்பு தெரிவித்தார். அடுத்த நாளே அவரது கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். அரசின் இந்த முயற்சி மராத்தி மொழியையும் கலாசாரத்தையும் அழிக்கும் செயல். பிராந்திய மொழிகளை அழிக்க பாஜ துடிக்கிறது என பலரும் விமர்சித்தனர். அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அடுத்ததாக அரசின் மொழி பரிந்துரைக் குழுவே எதிர்ப்பு தெரிவித்தது. இந்தி கட்டாயப்பாடம் என்ற முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியது. அதுவரை இந்தி கட்டாயப்பாடம் கிடையாது என மழுப்பிய பட்நவிஸ், மராத்திதான் முக்கியம் என பல்டி அடித்தார்.

உடனே, பட்நவிசின் முடிவை ஒன்றிய அரசு ஏற்கிறதா, அப்படியானால், புதிய தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தும் தெளிவான உத்தரவை ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்குமா என்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. ஒருபுறம் இந்தி கட்டாயமில்லை என பட்நவிஸ் கூறிய ஒரு சில நாளிலேயே ‘இந்தி கட்டாயம்’ என்ற வார்த்தை அரசு ஆணையில் உள்ளது. அதனை நீக்கி புதிய அரசாணை வெளியிடப்படும் என உண்மையை போட்டுடைத்தார் கல்வி அமைச்சர் தாதா புசே. பாஜ ஆளும் மகாராஷ்டிராவிலேயே இந்த நிலை ஏற்பட்டது ஒன்றிய அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜவே ஆட்சி செய்தாலும் இந்தியை திணிக்க முடியாது என்பதை இது நிரூபித்துள்ளது.

தமிழ்நாட்டை போல், கர்நாடகாவிலும் இந்தி திணிப்புக்கு முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். கன்னடம் முக்கியம். இந்திக்கு பதிலாக வேலை வாய்ப்புக்காக ஆங்கிலத்தை படிக்கலாம் என கர்நாடகாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்தார். பாஜவை பின்னணியில் இருந்து இயக்கும் இயக்கமாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது, மக்கள் மத்தியில் இந்தி திணிப்புக்கு இருக்கும் எதிர்ப்பின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. கர்நாடக பாஜ தலைவர்கள் இந்திக்கு ஆதரவாக பேசினால் எதிர்ப்பு வலுக்கும் என அறிந்து கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காக்கின்றனர். இந்தித் திணிப்புக்கு முதல் எதிர்ப்பு தொடங்கியது தமிழகத்தில் தான். நாடு சுதந்திரமடைவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது.

1937ம் ஆண்டு தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் அது தீவிரமாகி, இந்தியை விரட்டியது. இந்தி திணிப்பு எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பதில் தமிழ்நாடு தீவிரம் காட்டி வருகிறது. இப்போது ‘இந்தி தெரியாது போடா’ என முழங்கும் அளவுக்கு அந்த இயக்கம் வலுப்பெற்றிருக்கிறது. தமிழ் மொழியை காக்க வேண்டும் என்ற லட்சியப்போராட்டம் ஏறக்குறைய 88 ஆண்டாக இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மொழியைக் காக்கும் போராட்டத்தில் தீரத்துடன் இயங்கும் தமிழகத்தின் உறுதி, நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. நமது மாநில மொழியை எப்படி இந்தி ஆக்கிரமித்து ஆட்டம் போடுகிறது என்பது அவர்களுக்கு இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தமிழகம் தொடங்கிவைத்த இந்த இந்தித் திணிப்பை எதிர்க்கும் மொழிகாக்கும் கனல், பல்வேறு மாநிலங்களிலும் பரவிப் படர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.

இது, பாஜ ஆளும் மாநிலத்திலேயே மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முடியாத அளவுக்கு சென்றுள்ளது. தங்களது கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்காக, கல்வி நிதியை நிறுத்தும் அளவுக்கு சென்று கல்வி உரிமையை, மாநில உரிமையை பறிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் செயல் என அரசியல் விமர்சகர்கள் ஓங்கி குரல் கொடுத்து வருகின்றனர். இந்த மொழி காக்கும் போரில் தமிழ்நாட்டுடன் இந்தியாவின் மற்ற மாநிலங்களும் இப்போது கைகோர்த்து வருகின்றன என்பது தான் நமக்கு கிடைத்த மகத்தான வெற்றி.

மும்மொழிக் கொள்கை வடமாநிலங்களில் தோல்வி
உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, அரியானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்ளிட்ட இந்தி பேசும் வட மாநிலங்களில் முதல் மொழி இந்தி, 2வது மொழி ஆங்கிலம். மூன்றாவது மொழியாக பேச்சு வழக்கில் இல்லாத சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. மேற்கண்ட மாநிலங்களில் ஒரு சிலவற்றில் சமஸ்கிருதத்துக்குப் பதிலாக உருது மொழி கற்பிக்க வலியுறுத்தப்படுகிறது. இந்த மாநிலங்களில் தென் மாநிலங்களின் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னட மொழிகள் மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படுவதில்லை. இது குறித்து குறிப்பிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த கல்வியாளர் நிரஞ்சனராத்யா, மும்மொழிக் கொள்கை வடமாநிலங்களில் தோல்வியடைந்தது விட்டது.

தென்மாநிலங்களின் மொழியை ஒரு போதும் மூன்றாவது மொழியாக அவர்கள் கற்பிப்பதில்லை. வடமாநிலங்களில் உள்ள பஞ்சாபி, காஷ்மீரி மொழிகள் 2வது அல்லது 3வது மொழியாக கற்பிக்கப்படவில்லை. அப்படியிருக்க, வடமாநிலங்களில் உள்ள இந்தியை இங்கு எவ்வாறு ஏற்க முடியும் என்றார்.

இந்தி ஆட்சி மொழியாக உள்ள மாநிலங்கள்
பீகார்
சட்டீஸ்கர்
ஹரியானா
இமாசலப்பிரதேசம்
ஜார்க்கண்ட்
மத்தியபிரதேசம்
ராஜஸ்தான்
உத்தரபிரதேசம்
உத்தரகாண்ட்
சண்டிகார்
டெல்லி
மேற்கண்ட மாநிலங்களில் இந்தி மட்டுமின்றி பிற ஆட்சி மொழிகளாக பீகார், உத்தரபிரதேசம், டெல்லியில் உருது, சட்டீஸ்காரில் சட்டீஸ்கரி, அரியானாவில் ஆங்கிலம், பஞ்சாபி, இமாசல பிரதேசம், உத்தரபிரதேசத்தில் சமஸ்கிருதம் ஆகியவையும் ஆட்சி மொழிகளாக உள்ளன. இவற்றில், பீகார், சட்டீஸ்கர், அரியானா, இமாசலப்பிரதேசம், ஜார்கண்ட், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் உத்தகாண்ட், சண்டிகார் ஆகியவை இந்தி பேசும் மாநிலங்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

சமஸ்கிருதத்தை வளர்க்க தமிழை அழிக்கிறதா?
தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேசும் தமிழ்மொழியை ஆய்வு செய்யும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு 74.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் யாரும் பேசாத சமஸ்கிருதுத்துக்கு 1,487 கோடி ஒதுக்கீடு செய்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த மாநிலத்தின் மொழியும் அல்ல. ஆனால் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.2,869 கோடி. இந்த பத்தாண்டுகளில் தமிழுக்கு வெறும் நூறு கோடி ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு செலவிட்டதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இது சமஸ்கிருதத்தை வளர்க்க தமிழை அழிக்கும் ஒன்றிய அரசின் முயற்சி என மொழி ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

செம்மொழி அந்தஸ்தை தமிழ் பெற்றது எப்படி?
1999ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி சென்னையில் நடைபெற்ற திருவள்ளுவர் நாள் விழாவில் பேசிய முதல்வர் கலைஞர், ‘‘தமிழ் செம்மொழியா, இல்லையா? என்ற விவாதம், இனியும் தேவை இல்லை. தமிழ்ச் செம்மொழிதான். ஒன்றிய அரசு அதை உடனே அறிவிக்கவேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கிணங்க 2004ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்ற ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழைச் செம்மொழியாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆணை, 2004 அக்டோபர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது செம்மொழி அந்தஸ்தை பெற்றுத்தந்தார் கலைஞர். தொன்மை, தனித்தியங்கும் தன்மை; பொதுமைப் பண்பு; நடுவு நிலைமை; பல மொழிகட்குத் தாய்; பட்டறிவு வெளிப்பாடு; பிறமொழித் தாக்கமின்மை; இலக்கிய வளம், உயர் சிந்தனை; மொழியியல் கோட்பாடு போன்ற சிறப்புமிகு தகுதிகளைக் கொண்டது தமிழ்மொழி.

* ஒரு மொழியை, செம்மொழி என வகைப்படுத்தும் நடைமுறை ஐரோப்பியாவில் தோன்றியது. உலகளவில் கிரேக்கமும் , இலத்தீனும் அறிஞர்களால் செம்மொழிகளாகக் கருதப்பட்டன. இலக்கிய வளமே ஒரு மொழிக்கு ‘செம்மொழி’ எனும் தகுதியை பெற்றுத் தருகிறது. பொது ஆண்டுக்கு பின் 794 முதல் 1185 வரையிலான காலத்திய ஜப்பானிய இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு இலக்கியங்களும் செவ்வியல் இலக்கியங்களாக கருதப்படுகின்றன. கி.பி 1660 முதல் கி.பி 1714 காலத்திய ஆங்கில இலக்கியங்கள் செவ்வியல் தன்மை கொண்டதாய் கருதப்படுகின்றன.

செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி தமிழ்மொழி
செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகள் பல அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், முதன் முதலாக 2004ம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து பெற்றது தமிழ் மொழிதான். அதற்கு அடுத்ததாக சமஸ்கிருதம் (2004), தெலுகு, கன்னடம் (2008), மலையாளம் 2013, ஒடியா (2014), அஸ்ஸாமி, பெங்காலி, மராத்தி (2024) ஆண்டுகளில் செம்மொழி அந்தஸ்து பெற்றன. இதுபோல் கடந்த ஆண்டில் பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்தை ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. இவையிரண்டும் வழக்கில் இல்லாத மொழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டு மொழி கணக்கெடுப்பில் உள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியாவில் அதிக மக்கள் பேசும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுகு, இந்தி உட்பட 122 மொழிகளும், வட்டார அளவில் சிறு எண்ணிக்கையிலான மக்கள் பேசும் 1,599 இதர மொழிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு மொழி கணக்கெடுப்பின்படி, 19,569 தாய் மொழிகள் உள்ளன எனவும், இவற்றில் பெரும்பாலானவை வகைப்படுத்தப்படாதவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகள் எண்ணிக்கை 22. இதில், தமிழ், தெலுகு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகள் அடங்கும்.

இந்தியாவில் உள்ள தாய் மொழிகள்19,569
8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டவை 22
10,000க்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுபவை 121
யுனெஸ்கோ பட்டியலின்படி அழியும் நிலையில் உள்ள இந்திய மொழிகள் 197

ராஜாஜியின் அறிவிப்பால் கிளர்ந்தெழுந்த போராட்டம்
ஒருங்கிணைந்த மதராஸ் மாகணத்தின் முதல்வராக இருந்த ராஜாஜி, நடுநிலைப்பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற உத்தரவை 1937 ஆகஸ்ட் 11ம் தேதி பிறப்பித்தார். இந்தித் திணிப்பு நடந்த நேரத்தில் ராஜாஜியின் இந்த அறிவிப்பு காரணமாக இந்தி எதிர்ப்புக்கான முதல் போராட்டம் 1937ல் தொடங்கியது. பின்னர் 1938 ஏப்ரல் 21ம் தேதி 125 நடுநிலைப்பள்ளிகளில் இந்தியை கட்டாயப்பாடமாக நடத்துவதற்கு அரசாணை பிறப்பித்தார். இதை தந்தை பெரியாரும், நீதிக்கட்சி தலைவர் ஏ.டி.பன்னீர் செலவமும் உடனடியாக எதிர்த்தனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்தது.

இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சி, கரந்தை தமிழ்ச்சங்கம், முஸ்லிம் லீக், பெரியாரின் சுய மரியாதை இயக்கம் உள்ளிட்டவை இந்தித் திணிப்புக்கு எதிராக கிளர்ந்தெழுந்தன. பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், குமாரசாமி பிள்ளை, சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டதில் தீவிரமாக ஈடுபட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து, சென்னையை சேர்ந்த நடராசன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசால் தாக்கப்பட்ட அவர்கள், நோய்வாய்ப்பட்டனர். 1939ம் ஆண்டு ஜனவரியில் நடராஜனும், மார்ச்சில் தாளமுத்துவும் இறந்தனர். இன்றும் அவர்கள் மொழிப்போர் தியாகிகளாக நினைவு கொள்ளப்படுகின்றனர். அவர்கள் நினைவாகத்தான் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ கட்டிடத்துக்கு தாளமுத்து நடராசன் மாளிகை என கலைஞர் பெயரிட்டார்.

பல்வேறு மாநிலங்களில் நடந்த மொழிப் போராட்டங்கள்
* தமிழ்நாட்டில் 1937, 38 ஆண்டுகளிலும், 1947 முதல் 1950 வரையிலும் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. 1965ல் ஒன்றிய அரசின் அலுவல் மொழி சட்டத்துக்கு எதிராகவும் , 1967 முதல் 1968வரை மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. இதனால்தான் தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் உள்ளது. இரு மொழிக் கொள்கையே நீடிக்கிறது.

* கர்நாடகாவில் மும்மொழிக் கொள்கை அமலில் இருந்தாலும், இந்தி திணிப்புக்கு ஆதரவு இல்லை. பள்ளிகளில் சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் அளித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால், இது தொடர்பாக ஆராய குண்டுராவ் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு பேராசிரியர் விநாயக் கிருஷ்ண கோகக் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இக்குழு, கன்னடத்தை முதன்மை மொழியாக்க 1981ல் பரிந்துரை செய்தது. இதை நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், கோகக் பரிந்துரையை செயல்படுத்த கோரி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது.

* கோவாவில் மராத்தி மொழிக்கு மாற்றாக தங்களது கொங்கனி மொழியை பயன்படுத்த வேண்டும் எனக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன. போர்ச்சுகீசியர்களிடம் இருந்து 1961ல் கோவா விடுதலை பெற்ற பிறகு ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடித்து வந்தது. எனவே, கொங்கனியை தனி மொழியாக அங்கீகரிக்க வலியுறுத்தினர். மகாராஷ்டிராவுடன் கோவாவை இணைக்கக் கூடாது என்ற முடிவுக்குப்பிறகு, 1986ல் கொங்கனி பிரஜஸ்டோ ஆவாஸ் போராட்டம் நடத்தப்பட்டு கலவரம் ஆனது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் 1987ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி கோவாவின் ஒரே ஆட்சி மொழியாக கொங்கணி அங்கீகரிக்கப்பட்டது.

* மேற்கு வங்கத்தில் அமர பங்காலி என்ற இயக்கம் வங்க மொழியை காப்பதற்காக 1980களில் உருவாக்கப்பட்டது. அந்த இயக்கம் பெரிய அளவில் செல்வாக்கு பெறவில்லை. தற்போது பங்ளா போக்கோ என்ற அமைப்பு இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மெட்ரோ ரயில் பயணச்சீட்டில் இந்தி, ஆங்கிலத்தோடு வங்க மொழியும் அச்சிடப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசுப் பணி தேர்வுகளில் வங்க மொழியில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

The post தாய்மொழியைக்காக்க வடமாநிலங்களிலும் போராட்டம் இந்தி தெரியாது போடா… நாடு முழுவதும் பரவியது தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு தீ appeared first on Dinakaran.

Related Stories: