எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி பணிகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை தமிழ்நாடு அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரித் தொகையை தமிழக அரசே ஏற்கும் என்று முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை, சுற்றுச்சூழல் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பொன்னேரி துரை சந்திரசேகர் (காங்கிரஸ்) பேசியதாவது: அயோத்திதாசர் குடியிருப்பு என்ற திட்டத்தைக் கொண்டு வந்து ஏழை எளிய மக்கள், ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்ற இடங்களுக்கு அவர்களுக்கு குடியிருப்புகளையும், கட்டிட வசதிகளையும் செய்து கொடுக்கின்ற வகையில் சுமார் ரூ.200 கோடி ஒதுக்கி, 5 ஆண்டுகளில் அதை ரூ.1000 கோடியாக உயர்த்தி, wwஇந்த மக்களுக்காக இவ்வளவு செலவு செய்கின்ற இந்த அரசை பாராட்டுகிறேன்.

தொகுதி மேம்பாட்டு நிதியை நீங்கள் ரூ.3 கோடி தருகிறீர்கள். ஆனால், கேரளாவில் ரூ.7 கோடி தருகிறார்கள். ஏனென்றால், கடந்த ஆட்சியில் தான் ரூ.3 கோடி கொண்டு வந்தார்கள். முதன்முதலில் நமது முதல்வருடைய வழிமொழிதலின் பெயரில்தான், அப்போதைய முதல்வர் ரூ.25 லட்சத்தை கொடுத்தார். அப்போதுதான் தொடங்கியதுதான் இந்த மேம்பாட்டு நிதி, அது ரூ.3 கோடியாக கடந்த ஆட்சியில் கொடுத்தார்கள். நீங்கள் ரூ.6 கோடி கொடுத்து இந்த பெயரை நீங்கள் எடுத்துக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் சந்திரசேகர் பேசும்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி உயர்வைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்ல, உறுப்பினர்கள் பலரும் இதுகுறித்து என்னிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். மனுக்கள் மூலமாகவும் என்னிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு தொகுதிக்கு ஆண்டுதோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணிகளெல்லாம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அதே நேரத்தில் ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இந்த தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையும் இந்த நிதியிலிருந்தே கட்டப்படுவதால், தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில், இதுகுறித்து ஆராய்ந்து, வரி செலுத்துவதால் தொகுதி மேம்பாட்டுப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த 18 சதவீத வரித் தொகையை தமிழ்நாடு அரசே ஏற்கும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி பணிகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரியை தமிழ்நாடு அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: