சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: காஷ்மீரில், ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் ‘பஹல்காம்’ பகுதியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்த நேரத்தில், காட்டுப்பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்து, சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் இப்போது வரை 28 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை அரசு மீட்டு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குனமடைய பிரார்த்திக்கிறேன்.
The post சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியபயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை: சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.