கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


புதுடெல்லி: கட்டுமான நிறுவனங்களிடமிருந்து வீடுகளை வாங்கும் உரிமையாளர்கள், அந்த நிறுவனத்துக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை விற்பனை செய்த நிறுவனத்துக்கு எதிராக குடியிருப்பாளர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் பதாகைகளை வீட்டின் வெளிப்புறத்தில் வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கு எதிராக கட்டுமான நிறுவனம் தொடர்ந்த அவதூறு வழக்கில் வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்டுமான நிறுவனத்தின் அவதூறு வழக்கை எதிர்த்து வீட்டின் உரிமையாளர்கள் மாவட்ட நீதிமன்றம் மற்றும் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் இரு நீதிமன்றங்களும் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தன.

இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, \” பாதிக்கப்பட்டதாக கூறும் நுகர்வோர் பாதிப்பு ஏற்படுத்திய நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்த உரிமை உண்டு என்பதன் அடிப்படையில் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து வீடுகளை வாங்கிய வீட்டின் உரிமையாளர்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக போராட நுகர்வோர் என்ற அடிப்படையில் உரிமை உள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் கீழமை நீதிமன்றம் வழங்கிய அவதூறு வழக்குக்கு எதிரான சம்மன் ரத்து செய்வது குறித்து உயர் நீதிமன்றமே முடிவு செய்யும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

The post கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: