பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூடலூர் : கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க கோரி கூடலூர் அரசு கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கௌரவ விரிவுரையாளர் சங்க தலைவர் கிஷோர் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் விஜயசாருமதி, துணை செயலாளர் பொற்கோ, துணைத்தலைவர் அர்ஜுனன், பொருளாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீதிமன்ற தீர்ப்பின் படியும், அரசாணை 56ன் படியும், இருகட்டமாக கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணிநிரந்தரம் செய்யும் வரை காலமுறை ஊதியம் 12 மாதமும் வழங்க வேண்டும்,பணிபாதுகாப்புடன் கூடிய பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும். பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், அனைத்து கௌரவ விரிவுரையாளர்களுக்கு குழுக்காப்பீட்டு திட்டம் ஏற்படுத்திதர வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்ய வேண்டும். விடுபட்ட பாடப்பிரிவில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு புதிய அரசாணை வெளியிட்டு மாத நிலுவை ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும்.

பணிக்காலத்தின் போது இறந்து போன கௌரவ விரிவுரையாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கெளவுரவ விரிவுரையாளர்களின் 9 அம்ச கோரிக்கைகளை நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு முழக்க போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் அனைத்து கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி கெளரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: