நீட் விலக்கு தந்தால்தான் பாஜவுடன் கூட்டணி என்று அறிவிக்க தயாரா..? எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

ஊட்டி: தமிழகத்துக்கு நீட் விலக்கு தந்தால்தான் பாஜகவுடன் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாள் கள ஆய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். இதன்பின்னர் ஊட்டி எச்பிஎப் பகுதியில் ரூ.499 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தார். இதையடுத்து ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1,703 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

15 ஆயிரத்து 634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது;
திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அரசியான ஊட்டிக்கு வந்திருப்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். கொளுத்தும் கோடை வெப்பத்திற்கு சற்று இளைப்பாற நீலகிரி மாவட்ட அரசு விழாவுக்கு வந்துள்ளேன். நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது ஊட்டிக்கு, 3வது குடிநீர் திட்டம் கொண்டுவந்தேன்.

உள்ளாட்சி கடை உரிமையாளர்களுக்கு உரிமம் நீட்டிப்பு மற்றும் பெயர் மாற்றம் செய்ய அனுமதி அளித்தேன். எடை குறைவான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உறுதிசெய்யும் திட்டம், இந்த ஊட்டியில்தான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கி வைத்தேன். இந்தாண்டுக்கான பட்ஜெட்டில், குன்னூர் தோட்ட தொழிலாளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய கலைக்கல்லூரி துவக்கப்படும் என அறிவித்துள்ளோம். ஊட்டியில் சூழலியல் பூங்கா ரூ.70 கோடியில் வர உள்ளது. 33 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கிடைக்காதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணி துவங்கியுள்ளது.

ஊட்டிக்கு யார் வந்தாலும், உடலும், மனமும் குளிர்ந்து திரும்பி போவார்கள். அப்படி, எங்களை குளிர்விக்கும், உங்களை குளிர்விப்பதற்காக இப்போது 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். நீலகிரி மாவட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாத ஏழை மக்களுக்கு, கூடலூரில் ரூ.26 கோடி செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும். பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள இம்மாவட்டத்தில் அவர்களது வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.10 கோடியில் ஆராய்ச்சி மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும். நீலகிரியில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்னும் புதிய சுற்றுலா திட்டம் ரூ.5 கோடியில், புதிய பேருந்துகளுடன் துவங்கப்படும்.

ஊட்டியில் சுற்றுலா காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் நிறைவேற்றப்படும். நடுகாணியில் சூழலியல் மையம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும். பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் 575 கோடியில் 23 சமுதாய கூடம், நகர்ப்புற பகுதியில் ரூ.10 கோடியில் 200 வீடுகள் கட்டித்தரப்படும். தமிழ்நாடு மட்டும் வளர்ச்சி அடைந்தால் போதாது, இந்தியா முழுவதும் இந்த வளர்ச்சி இருக்க வேண்டும் என குரல் கொடுத்து வருகிறோம்.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய சதி செய்கிறார்கள். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி சீரமைப்பு செய்தால், நம்மை போன்ற மாநிலங்கள் வெகுவாக பாதிக்கும். நம்மை போன்ற மாநிலங்கள் பெரிய அளவில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையை இழக்க நேரிடும். தென்மாநிலங்களும் நிறைய தொகுதிளை இழக்கும். இந்த பேராபத்தை தடுக்க சென்னையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினோம். 7 மாநிலங்களை சேர்ந்த 22 கட்சிகள் அந்த கூட்டத்தில் பங்கேற்றன. இதில், அகில இந்திய அளவில் குழு அமைத்துள்ளோம். இந்த குழு சார்பில் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். பிரதமர் மோடி நேரம் ஒதுக்குவார் என நம்புகிறோம்.

இன்று பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருக்கிறார். நான், நீலகிரி விழாவுக்கு வந்துவிட்டதால் அங்கு வர இயலாது என ஏற்கனவே பிரதமரிடம் தெரிவித்துவிட்டேன். தொகுதி மறுசீரமைப்பில், தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை போக்க பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறையாது என தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் அறிவிக்க வேண்டும். இதை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். தமிழகம்-புதுவையில் 40 நாடாளுமன்ற தொகுதி என்பது நமது அதிகாரம், உரிமை. இதை நாங்கள் இழக்க மாட்டோம்.

வக்பு வாரிய சட்டத்திருத்தம் கடும் எதிர்ப்பை மீறி நிறைவேற்றி உள்ளார்கள். இதை நாம் கடுமையாக எதிர்த்தோம். நமது எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். எதையும் காதில் வாங்காமல் இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால், அதிமுக எம்.பி. தம்பிதுரை ஒரு நிமிடம் மட்டுமே பேசினார். அதிலும், எதிர்ப்பா? ஆதரவா? என சொல்லவில்லை. வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில், ஆ.ராசா எம்.பி., பெயரில் உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடரப்படும்.

தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதவை ஒன்றிய பாஜ அரசு நிராகரித்துள்ளது.இதற்காக அடுத்த கட்டமாக வரும் 9ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் நீட் காரணமாக மாணவி பலியானதற்கு திமுகவின் மீது குற்றம்சாட்டி அறிக்கை விடுகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு வந்ததா? கலைஞர் முதல்வராக இருந்தவரையும் நீட் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியும் பாஜவின் பாதம் தாங்கிகளாக இருந்துகொண்டு நீட் தேர்வை அனுமதித்தனர்.

நான் இப்போது கேட்பது, நீங்கள் பாஜவுடன் கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்தபோது ஏன் நீட் விலக்கு ேவண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நீட் விரும்பாத மாநிலத்திற்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என ராகுல்காந்தி உறுதிமொழி அளித்தார். அதை நாங்கள் தான் அவரை சொல்ல வைத்தோம். இப்போது, பழனிசாமி நீட் ரகசியம் சொல்ல எங்களிடம் கூறுகிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தால் தமிழ்நாட்டில் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும். எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பாஜவுடன் கூட்டணி இருக்கு, இல்லை என மாற்றி மாற்றி பேசி வருகிறார்.

அவருக்கு இந்த மேடையில் இருந்து சவால் விடுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மாணவர்களின் மீது துளியாவது அக்கறை இருந்தால், பாஜவுடன் கூட்டணி செல்வதற்கு முன்பு நீட் விலக்கு அளித்தால் தான் கூட்டணியில் இணைவோம் என அவரால் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? நீட் விலக்கு வேண்டி உருப்படியாக ஒன்னும் செய்யாமல், வாய் சவடால் மட்டுமே செய்து வருவதால் தான் பழனிசாமி மக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார். எங்களை எத்தகைய அரசியல் சூழ்ச்சியாலும் வீழ்த்திடவும் முடியாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீழ்த்தவும் விட மாட்டேன். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், ஆ.ராசா எம்பி, அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post நீட் விலக்கு தந்தால்தான் பாஜவுடன் கூட்டணி என்று அறிவிக்க தயாரா..? எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் appeared first on Dinakaran.

Related Stories: