இக்குற்றச்செயல் தொடர்பாக, பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டும், ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டும் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 50க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சியங்கள், சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர் விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.
இவ்வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சின் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் விசாரணை நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து, கைதான 9 பேரிடம், சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் நேற்று சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நேற்று காலை முதல் மாலை 4.30 மணி வரை வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. பின்னர் விசாரணையை வருகிற 9ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்: அரசு தரப்பு சாட்சி விசாரணை நிறைவு appeared first on Dinakaran.