கூடா நட்பு கேடாய் முடியும் தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்: அதிமுகவை விமர்சித்து பாஜ போஸ்டர்

விருதுநகர்: தற்குறியுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுகவை விமர்சித்து பாஜவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இதனையடுத்து, வரும் 2026ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியானது.  இதற்கான முயற்சியில் இரு கட்சி தலைமையும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அண்ணாமலையை கட்சி தலைவர் பதிவியில் இருந்து நீக்கினால்தான் கூட்டணிக்கு சம்மதம் எடப்பாடி ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை மாற்ற பாஜ மேலிடம் முடிவு செய்து உள்ளது. வரும் 9ம் தேதி பாஜவுக்கு புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில் அதிமுக – பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதே போல், விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவை விமர்சித்தும், பாஜ தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜ விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் சிபிச்சக்கரவர்த்தி என்பவர் ஒட்டியுள்ளார். அதில், ‘தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்’ (அதிமுக) ‘கூடா நட்பு கேடாய் முடியும்’, ‘வேண்டும் மீண்டும் அண்ணாமலை’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர்களால் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

The post கூடா நட்பு கேடாய் முடியும் தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்: அதிமுகவை விமர்சித்து பாஜ போஸ்டர் appeared first on Dinakaran.

Related Stories: