சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 11 பேரிடம் ஆவின் பால்பூத் வைக்க அனுமதி பெற்றுத்தருவதாக கூறி ரூ.19 லட்சத்து 41 ஆயிரம் வரை பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (24). கஞ்சா வைத்திருந்ததாக இவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகேயுள்ள குட்டிதின்னி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (46). இவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (20). இவரை கொலை முயற்சி வழக்கில் திருப்பாச்சேத்தி போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆசிஷ்ராவத், மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித்துக்கு பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக கலெக்டர் பிறப்பித்த உத்தரவை அடுத்து 4 பேரும் நேற்று குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.
The post சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.