தொழிலாளர்களின் கனவை சிதைக்கும் பணவீக்கம்.. முடி திருத்துபவருடன் பேசியதை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி!!

டெல்லி: நாள் முழுவதும் உழைத்தாலும் முடிவில் எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் இந்தியாவின் கடும் உழைப்பாளிகள் மற்றும் நடுத்தர வர்கத்தின் இன்றைய நிலை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் சலூன் ஒன்றில் தாடியை டிரிம் செய்து கொள்ள சென்ற ராகுல் காந்தி முடி திருத்துபவருடன் உரையாடிய விடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்போது பேசிய சலூன் கடைக்காரர் அஜித், நாள் முழுவதும் உழைத்தாலும் நாளின் முடிவில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை என்று ராகுலிடம் வருத்தத்துடன் கூறினார். இது குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, அஜித் கூறிய எதுவும் மிச்சமில்லை என்ற வார்த்தைகளும் அவரது கண்ணீரும் தான் இன்றிய இந்தியாவின் கடினமாக உழைக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலை என்று குறிப்பிட்டுள்ளார்.

முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வரை குயவர்கள் முதல் தச்சர்கள் வரை தொழிலாளர்களின் சொந்த கடை, சொந்த வீடு என்ற கனவையும், அவர்களது சுய மரியாதையையும் குறையும் வருவாய், அதிகரிக்கும் பணவீக்கம் கொள்ளையடித்து விட்டதாக ராகுல் சாடியுள்ளார். எனவே தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க செய்யும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்கள் தான் இன்றைய தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், இந்த சமூகத்தில் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம், கடின உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

The post தொழிலாளர்களின் கனவை சிதைக்கும் பணவீக்கம்.. முடி திருத்துபவருடன் பேசியதை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி!! appeared first on Dinakaran.

Related Stories: