×
Saravana Stores

அரசு பள்ளியில் கட்டப்படும் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியர்: வீடியோ வைரலால் பரபரப்பு

புழல்: சோழவரம் அருகே அரசு பள்ளியில் சுற்றுசுவர் அமைக்க போடப்பட்ட அடித்தளத்தை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் பெரும் பரபரப்பு நிலவியது. சோழவரம் அடுத்த ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணியம்பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த, தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக கான்க்ரீட் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளியின் தலைமை ஆசிரியரான மெய்யழகன் என்பவர், பள்ளியின் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக போடப்பட்ட கான்க்ரீட் தூண்களை இடித்து சேதப்படுத்தியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

தகவலறிந்ததும், சோழவரம் போலீசா சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மெய்யழகனின் விவசாய நிலத்திற்காக, அரசு பள்ளியை ஒட்டி குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் கொண்டு செல்வதாகவும், கான்கிரீட் தூண்கள் அமைத்து சுற்றுச்சுவர் கட்டப்படுவதால் தனது நிலத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது பாதிக்கப்படும் என்பதால் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அரசு பள்ளியில் கட்டப்படும் சுற்றுச்சுவரை சேதப்படுத்திய ஒய்வுபெற்ற தலைமை ஆசிரியர்: வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Kanniyampalayam village ,
× RELATED குறைந்த மின்னழுத்த பாதிப்பை தடுக்க...