×
Saravana Stores

அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

மயிலம், அக். 24: மயிலம் அருகே அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்துள்ள அவ்வையார்குப்பம் கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக திண்டிவனத்திற்கு சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தை கிராம மக்கள் சிறைப்பிடித்து பேருந்து முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காக சென்ற பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பேருந்தில் சிக்கித் தவித்தனர்.

The post அரசு பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Peacock ,Mylam ,Avvaiyarkuppam ,Villupuram ,Dinakaran ,
× RELATED பிளேடால் கழுத்தை அறுத்துகொண்டு வெல்டிங் தொழிலாளி தற்கொலை முயற்சி