×
Saravana Stores

மாமல்லபுரம் உள்ளூர் நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இது, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும கட்டுபாட்டின் கீழ் உள்ளது. மேலும், வணிக வளாகத்தில் கடை வைத்துள்ள வியாபாரிகள் தங்களது வருமானத்திற்காக உள்ளூர் நபர் ஒருவரை தினக்கூலி அடிப்படையில் பார்க்கிங் ஏறியாவில் நிற்க வைத்து, அங்கு வரும் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அனுப்ப அறிவுறுத்தினர். இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதிக்கு வந்த ஒரு காரை வழிவிடாமல் மறித்து பார்க்கிங்கில் நிறுத்த சொல்லி அந்த நபர் கூறி உள்ளார்.

அப்போது, காரில் வந்தவர்கள் நீங்கள் சொல்லும் இடத்தில் காரை நிறுத்த முடியாது என கூறி உள்ளனர். இதில், காரில் வந்தவர்களுக்கும் அந்த உள்ளூர் நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த 2 பெண்கள் காரில் இருந்து கீழே இறங்கி அந்த நபர் கையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி எங்களையே தகாத வார்த்தைகளாய் திட்டுவியா? அவனை அடித்து முகத்தை கிழியுங்கள் எனக் கூறிக் கொண்டு, அந்த நபரை ஒரு பெண் பிளாஸ்டிக் பைப் உடையும் வரை சரமாரியாக தாக்கினார்.

அப்போது, உடனிருந்த மற்றொரு பெண்ணும் திடீரென ரவுடியாக மாறி காலால் எட்டி எட்டி உதைத்தார். இதைப் பார்த்த, மற்ற 2 நபர்களும் அவர்களது பங்குக்கு அந்த நபரை அடித்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டனர். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் 2 பெண் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் காரில் ஏறி தப்பி விட்டனர். மேலும், இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இதையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் மீனவர் பகுதியை ஏழுமலை (42), என்பவரை மாமல்லபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து புகார் மனு பெற்றனர்.

தொடர்ந்து, மாமல்லபுரம் போலீசார் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பதிவெண் இல்லாத காரில் வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது அசிங்கமாக திட்டியது, பிளாஸ்டிக் பைப் மூலம் அடித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் விசாரித்தனர். இந்தநிலையில், 4 பேர் கொண்ட கும்பல் தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் தங்கி இருப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாமல்லபுரம் போலீசார் நேற்று காலை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதிக்கு சென்று, தாம்பரம் போலீசார் உதவியோடு 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அழைத்து வந்து மாமல்லபுரம் அருகே ஒரு கெஸ்ட் அவுசில் வைத்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அதில், முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபு இன்பதாஸ் (41), கீர்த்தனா மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சண்முகபிரியா (38), என்பதும், கிருஷ்ணமூர்த்தி என்பவர் தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிய வந்தது. இதில், கிருஷ்ணமூர்த்தி – சண்முகபிரியா கணவன், மனைவி என கூறப்படுகிறது.

மேலும், பிரபு இன்பதாஸ் கடந்த 2021ம் சட்டமன்ற தேர்தலில் நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, தோல்வி அடைந்ததாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொருளாளராக இருப்பதாகவும், தற்போது வைர வியாபாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. போலீசார், நேற்று மாலை 3 பேரையும் திருப்போரூர் மாஜிஸ்ட்ரேட் அனுபிரியா முன்னிலையில், ஆஜர்படுத்தினர். அப்போது, நவ.5ம் தேதி வரை புழல் சிறையில் உத்திரவட்டார். மேலும், தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தி என்பவரை மாமல்லபுரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post மாமல்லபுரம் உள்ளூர் நபர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Mamallapuram Pudunagar Development Group ,
× RELATED 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம்