×
Saravana Stores

‘துரோகம்’ தியாகத்தை பற்றி பேசுவதா? முதல்வர் பதவிக்காக முதுகில் குத்திய இபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சென்னை: முதல்வர் பதவிக்காக அனைவரது முதுகிலும் குத்திய துரோகியை மக்கள் நம்ப தயாராக இல்லை என எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, பன்னீர்செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்குதல் நடத்தி வருவதால் மீண்டும் அதிமுகவில் சேரலாம் என்று திட்டமிட்டிருந்த பன்னீர்செல்வத்தின் கனவு, கானல் நீராகிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக தாக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ஜெயலலிதா மறைவிற்கு பின், துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோக செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோக கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது. ஏழு மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட் இழப்பு, 12 தொகுதிகளில் மூன்றாவது இடம், கன்னியாகுமரியில் நான்காவது இடம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்காவது இடம் என படுதோல்வியை நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக சந்தித்தது.

இதன்மூலம், முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதல்வர் பதவியில் அமர்த்தியவர், முதல்வர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. இந்த துரோக செயல் காரணமாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி தற்போது 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட ‘துரோகம்’ தியாகத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது.

இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும். ‘தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன்தெரி வார்’ அதாவது, தனக்கு செய்யப்பட்ட உதவி தினை அளவே ஆனாலும், பண்புள்ளவர்கள் அதைப் பனை அளவுக்கு கருதிக் கொள்வார்கள் என்கிறது திருக்குறள். அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால், பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமைப் பதவிக்கு வர வேண்டும். இந்த தருணத்தில், ‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மதற்கு’ என்ற வள்ளுவரின் வாய்மொழியினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.அதாவது, எப்படிப்பட்ட பாவத்தை செய்தவர்க்கும் அதிலிருந்து தப்பிக்க வழி உண்டு. செய் நன்றி மறந்த பாவத்திலிருந்து விடுபட வேறு மார்க்கம் இல்லை என்கிறார் திருவள்ளுவர். எனவே, 2026ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப் பணியாற்றி அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க உறுதி ஏற்போம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா
மறைவிற்கு பின், துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோக செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

The post ‘துரோகம்’ தியாகத்தை பற்றி பேசுவதா? முதல்வர் பதவிக்காக முதுகில் குத்திய இபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : EPS ,O. Panneerselvam ,Chennai ,Former ,Chief Minister ,Edappadi Palaniswami ,Panneerselvam ,Sasikala ,AIADMK ,
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பி.எஸ். பதிலடி!