மூத்த வழக்கறிஞர் வில்சன் பற்றிய நீதிபதி ஆர்.சுப்பிரமணியனின் விமர்சனம் நியாயமானதாக இல்லை : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம்

டெல்லி :உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் நடந்துகொண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் புகார் கடிதம் அனுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சமீபத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் கடுமையாக பேசிய வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது. இதையடுத்தே இதை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கையில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் எழுதியுள்ள புகார் கடிதத்தில், “மூத்த வழக்கறிஞர் வில்சன் பற்றிய நீதிபதி ஆர்.சுப்பிரமணியனின் விமர்சனம் நியாயமானதாக இல்லை. நீதிபதி ஆர்.சுப்பிரமணியனின் விமர்சனம் நீதிபரிபாலனத்தை ஊக்குவிப்பதாக இல்லை.நீதிபதி செயல்பாடு குறித்து உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஐகோர்ட் அமைதி காப்பது, அதன் விதிமுறைகளை எதிர்காலத்தில் செயல்படுத்துவதை உறுதி செய்வதாக இல்லை.

நீதிமன்ற கண்ணியத்தை காக்கும் வகையில் நீதிபதிகள் நடந்து கொள்வது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் கருத்துகளை தெரிவிப்பதை உறுதி செய்வதாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். நீதித்துறையினர் மீதான புகார்களுக்கு தீர்வு காணும் வழிமுறையை வகுக்கவும் கோரிக்கை வைக்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் மேற்பார்வை குழு ஒன்றையும் அமைத்து நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.வழக்கறிஞர்கள் அச்சமின்றி பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மூத்த வழக்கறிஞர் வில்சன் பற்றிய நீதிபதி ஆர்.சுப்பிரமணியனின் விமர்சனம் நியாயமானதாக இல்லை : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: