ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர்: ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்டத்தை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் அடுத்த பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்டம் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா சுதாகர் அனைவரையும் வரவேற்றார்.

இந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் இந்திரா ராஜேந்திரன், டீன் வசந்தாமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பொன்னுசாமி, மாவட்ட சுகாதார அலுவலர் ப.பிரியா ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசியதாவது: தேசிய அளவில் ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு வரும் இம்மாதத்தில் மாநில அரசு சார்பாக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தினை இரண்டாம் கட்டம் இன்று துவக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு பல்வேறு வகையில் முன்னெடுத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மதிய உணவு திட்டத்தினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வைத்து வருகிறது. மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்கி தன்னிறவு பெற்றுள்ளது. மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் என்ற சிறப்பான திட்டம் உலகத்தில் எங்கும் இல்லை. அந்தத் திட்டத்தை மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இது மட்டும் போதாது மாணவர்களுக்கு நுண்ணுட்ட சத்தான இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இந்த இரும்பு சத்து மனிதனுக்கு மிக மிக முக்கியமான அவசியமான ஒன்றாகும். அனிமியாவை சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தால் அது ரத்தசோகை பாதிப்பு ஏற்படும். ஆகவே அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், வளரினம் பெண்கள் ஆகியோருக்கு செவிலியர்கள் இரும்புச்சத்து உள்ள ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுவதற்கு சரியான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

ஆகவே ஒன்றிணைந்து ரத்தசோகை குறைபாடு இல்லாத திருவள்ளூர் மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒன்றிணைவோம் என இவ்வாறு பேசினார். இதற்கு முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அடுப்பில்லா சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகளும், சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கியும், இத்திட்டத்திற்கு உதவி புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கு கேடயங்களையும் வழங்கியும் கலெக்டர் கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, இணை இயக்குனர்கள் (நிர்வாகம்) ஷெரின் பிலிப், (திட்டம்) மலர்விழி, பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்துவர் பாரதி, அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ அலுவலர் அருந்ததி மற்றும் பேராசிரியர்கள், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: