×

கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

ஆலந்தூர்: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்நோக்கு மருத்துவமனையில் உள்ள தேசிய முதியோர் நலமருத்துவ மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதன்பின்னர் தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக உதவியாளர், டேட்டா என்ட்ரி, ஆபரேட்டர் உள்ளிட்ட 43 பேருக்கு பணி வழங்கினார். இதில் முதல்கட்டமாக 28 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

இதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது; கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 8.64 ஏக்கர் பரப்பளவில் தேசிய நல வாழ்வு மருத்துவமனை தொடங்க வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்படும் ஒரே முதியோர் நல மருத்துவமனை இதுதான். 200 படுக்கை வசதிகள், 40 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகள் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, சென்னை, கோவை என அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டண படுக்கை அறைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைந்த அளவாக நாள் ஒன்றுக்கு 900 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்திற்குள் உணவு கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரமும் உள்நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பாட்டில் உள்ளது. இந்த மருத்துவமனை பிரத்யேக சேவைகளை கொண்டுள்ளது. 60 பணியிடங்கள் ரெகுலர் 276 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 8 மாதங்களில் 1,11,918 புறநோயாளிகள் இந்த மருத்துவமனை மூலம் பயன்பெற்றுள்ளனர். 579 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. 2900 சிடி ஸ்கேன், 5905 எக்ஸ்ரே, 1,62,301 ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு 1 கோடி மதிப்பிலான மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன. 8 கோடி மதிப்பிலான எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி மிக விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினார். தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ‘’ நீதிமன்றத்தின் சட்ட விதிகளுக்குள் நுழைய தயாராக இல்லை’’ என்றார்.

The post கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kindi National Elderly Welfare Hospital ,Minister ,Ma ,Subramanian ,Alandur ,Public Welfare ,National Centre for Elderly Health ,Chennai Kindi Artist Century Multipurpose Hospital ,MLA ,National Center for Elderly Welfare ,Ma. Subramanian ,Dinakaran ,
× RELATED நதி நீர் சீரமைப்பு தொடர்பாக...