புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை ₹3.05 கோடி 388 கிராம் தங்கம், 1.65 கிலோ வெள்ளியும் கிடைத்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, செப்.27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், புரட்டாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில், ₹3.05 கோடியை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். கோயில் உட்பிரகாரம் மற்றும் வெளி பிரகாரம், கிரிவலப்பாதை மற்றும் அஷ்டலிங்க சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் மற்றும் பவுர்ணமி சிரிவலம் தற்காலிக உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை எண்ணப்பட்டது.

அப்போது, கோயில் உண்டியலில் ₹3 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 85 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 388 கிராம் தங்கம், 1.652 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், கோயிலுக்குள் தரிசனம் செய்ய அதிகபட்சமான எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் சுமார் ₹3 கோடிக்கும் அதிகமாக வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று உண்டில் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தன்னார்வலராக பணியில் ஈடுபட்டிருந்த ஒரு மூதாட்டி தனது சேலை மறைவில் ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. அதனை, சிசிடிவி மூலம் கண்காணித்துக் கொண்டிருந்த அலுவலர்கள், உடனடியாக இதுகுறித்து விசாரித்தனர். தனது சேலையில் பணம் இருந்தது தனக்கு தெரியாது எனவும், தவறுதலாக விழுந்திருக்கலாம் எனவும் அந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். ஆனாலும், அவரை உண்டியல் கணக்கை எண்ணும் பணியில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்காமல், அந்த மூதாட்டியை வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post புரட்டாசி மாத உண்டியல் காணிக்கை ₹3.05 கோடி 388 கிராம் தங்கம், 1.65 கிலோ வெள்ளியும் கிடைத்தது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: