×

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

கள்ளக்குறிச்சி, செப். 25: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரியநெசலூரை சேர்ந்த ராமலிங்கம் மகள் மதி(17) பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தின்போது பள்ளி சூறையாடப்பட்டதோடு பள்ளி வாகனங்களும், போலீஸ் வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில் மதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் உயிரிழந்த மாணவி மதி தாயார் செல்வி இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் மீது போடப்பட்ட வழக்கு, எப்ஐஆர் நகல், சிசிடிவி காட்சிகள், ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து அதற்கான விசாரணை கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தரப்பில் தாளாளர் உள்ளிட்ட மூன்று பேர் ஆஜராகவில்லை. இந்நிலையில் பள்ளி மாணவி மதியின் தாய் செல்வி, இவரது கணவர் ராமலிங்கம் ஆகியோர் நேரில் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை அடுத்த மாதம் அக்டோபர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி (பொ) தனசேகரன் உத்தரவிட்டார்.

The post கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kalakurichi ,Ramalingam ,Mathi ,Vepur Periyanesalur, Cuddalore district ,Kaniyamoor Private School ,Chinnasalem, Kallakurichi District ,
× RELATED புகையிலை பொருட்கள் விற்ற 3 வியாபாரிகள் கைது