×

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

 

தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடந்த 21ம் தேதி சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதை தடுத்திடவும், மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் மூன்று படகுகளில் மீன்பிடிக்க சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கடந்த 21ம்தேதி சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருகிறது. அதோடு, மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அதிகாரிகள் இதுபோன்று கைது செய்வதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் விதிப்பதை தடுத்திட இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை தேவை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,Chief Minister ,M.K.Stal ,Union External Affairs Minister ,K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டு மீனவர்கள் கைது: ஒன்றிய...