×

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை

சென்னை, செப்.7: சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலக வளாகம் மற்றும் கார்கோ பிரிவில் சுங்கத்துறை பணியாளர்கள் சிலர் சமீபகாலங்களாக பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பயன்படுத்துகிறவர்கள் ஆங்காங்கே எச்சில்கள் உமிழ்ந்து, சுற்றுப்புற சூழ்நிலையை பாதிக்கும் விதத்தில் செயல்படுவதாகவும், சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்தபோது பான்பராக், குட்கா, ஹான்ஸ் மற்றும் வெளிநாட்டு மது வகைகள், சிகரெட்கள் சுங்கத்துறை வளாகங்களில் அதிக அளவு பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, சுங்கத்துறை அலுவலக வளாகத்திற்குள் பான்பராக், குட்கா, ஹான்ஸ், சிகரெட் மற்றும் ஆல்கஹால் பணி நேரங்களில் சிலர் பயன்படுத்துவதாகவும், அதனால் பல ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் சட்டம் 1964க்கு எதிரானது.

மேலும் அலுவலக வளாகத்திற்குள் இதுபோல் பயன்படுத்துவதால், அதனால் பல்வேறு நோய் தோற்று கிருமிகள் பரவி, அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது, நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கான, சட்ட விதிமுறைகள், 1984 ஆண்டில், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இவைகளை கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதுதவிர அலுவலக வளாகங்களில் பணி நேரங்களில் புகை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாக, 2008ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனவே விமான நிலைய சுங்கத்துறை அலுவலகம், விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள ஏர் கார்கோ அலுவலகங்களில், பணியாற்றுபவர்கள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என சுங்கத்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.

The post சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Customs Office ,Chennai Airport ,Customs ,Chennai ,Gutka ,Customs Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் 267 கிலோ தங்கம்...