நியோமேக்ஸ் மோசடி வழக்கை 15 மாதத்தில் முடிக்க வேண்டும் ; ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை, எஸ்.எஸ். காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தினர் அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி வரை முதலீடு வசூலித்தனர். பின்னர் முதலீட்டு பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக பலரும் புகார் அளித்தனர். இதன்பேரில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிறுவனத்தின் இயக்குநர்கள் கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாஜ நிர்வாகி வீரசக்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

கைதானவர்களில் கமலக்கண்ணன் உள்ளிட்ட சிலர் ஜாமீன் பெற்றனர். கமலக்கண்ணன் உள்ளிட்டோரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சில மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘‘நியோமேக்ஸ் நிறுவனத்தில் 3.6 லட்சம் பேர் பணம் முதலீடு செய்துள்ளனர். பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. ரூ.850 கோடி சொத்துக்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் 8 வாரத்தில் புகார் அளிக்க வேண்டும். போலீசார் 15 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நிதி நிறுவன சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

The post நியோமேக்ஸ் மோசடி வழக்கை 15 மாதத்தில் முடிக்க வேண்டும் ; ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: