ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி நாளை சென்னை வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் வசித்து வருகிறார். இவர் இன்று தனது வீட்டின் அருகே செல்போனியில் பேசிக்கொண்டிருந்த பொது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் சடலம் உடல்கூறு ஆய்வுக்காக ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கொலை வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார். இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரும், மாநில கட்சித் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் சோகத்தையும் சீற்றத்தையும் அலைக்கழித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தடுக்கப்படுவதற்கு அரசு உடனடியாக கடுமையான/தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாளை காலை சென்னை சென்று ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் திட்டமிட்டுள்ளேன். அனைவரும் அமைதி காக்க வேண்டும், இதுவே வேண்டுகோள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!! appeared first on Dinakaran.

Related Stories: