விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் : தமிழ்நாடு விண்வெளி தொழிற் கொள்கை வெளியீடு

சென்னை: விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய தமிழ்நாடு விண்வெளி தொழிற் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 20ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத் தொடரில் தொழில் மற்று முதலீட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்த அறிவிப்புகளில் முக்கியமான ஒன்றாக புதிய விண்வெளி கொள்கை வெளியிடப்படும் என்று அவர் அறிவித்தார்.

அதாவது, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் தமிழ்நாடு பெரும் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் இத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிகளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.மேலும், தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்தவும், அதிக அளவிலான முதலீடுகளை ஈர்க்கவும் மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இக்கொள்கையில் வகுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில், விண்வெளித்துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழ்நாடு விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கையின் கீழ் குலசேகரப்பட்டினத்தை சுற்றி உள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை ஸ்பேஸ் பே ஆக ஊக்குவித்து வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், விண்வெளித்துறையில் அதிகரிக்கும் வளர்ச்சி, சீர்திருத்தங்கள், முதலீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விண்வெளி கொள்கையை தமிழ் நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. தற்போது அதற்கான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. வலுவான தொழில்துறை, உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப நிபுணத்துவம் உள்ளிட்டவற்றை முழுமையாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது. விண்வெளிக் கொள்கை தொடர்பாக தொழிற்துறையினர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மற்றும் விரிவாக்க தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் விண்வெளி தொழில் விரிவாக்க மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post விண்வெளி துறையில் அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயம் : தமிழ்நாடு விண்வெளி தொழிற் கொள்கை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: