கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான புதுச்சேரி மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா உள்பட 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாதேஷ், கோவிந்தராஜ், விஜயா உள்பட 11 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் மற்றொரு பக்கம் விஷசாராயம் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்திட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கொண்ட ஒரு நபர் ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டிருந்தார். இந்த ஆணையம் முழுமையாக விசாரணை நடத்தி 3 மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்கவும் அதன்பிறகு தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க பரிந்துரைகள் வழங்க வேண்டும்.

விஷச் சாராய மரணங்களால் பாதிக்கும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றி பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: