ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பாஜ நிர்வாகி கோவர்த்தன் வீடு, ஓட்டலில் சிபிசிஐடி ரெய்டு: மகன்கள் 2 பேரிடமும் விசாரணை

சென்னை: கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில், எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படும் இந்த பணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் நவீன் அவரது சகோதர் சதீஷ், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடம் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

பணம் கை மாறிய இடங்களில் பாஜ தொழில்துறை மாநில தலைவர் கோவர்த்தனின் ஓட்டலும் ஒன்று என கூறப்படுகிறது. மேலும் கோவர்த்தன் தற்போது உடல் நலக்குறைவால் நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்தார். இதனால் விசாரணைக்கு அவரால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியுமா? என்பதை அறிவதற்காக கடந்த வாரம் சிபிசிஐடி போலீசார் நீலாங்கரை, பாலவாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

இந்நிலையில் நேற்று பாலவாக்கத்தில் உள்ள கோவர்த்தன் வீடு, சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது ஓட்டல் ஆகிய 2 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோவர்த்தன் சிகிச்சைக்காக கேரளா சென்று விட்டதால், அவரது மகன்கள் பாலாஜி, கிஷோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். கோவர்த்தன் சென்னை திரும்பியதும் அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பாஜ நிர்வாகி கோவர்த்தன் வீடு, ஓட்டலில் சிபிசிஐடி ரெய்டு: மகன்கள் 2 பேரிடமும் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: