வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை

திருவொற்றியூர்: எண்ணூரில் வீட்டுவாசலில் அமர்ந்திருந்த மூதாட்டியை வெட்டிக்கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பிய கும்பலை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். பெண்ைண காதலிக்கும் விவகாரத்தில் பேரனை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியில் மூதாட்டியை கொன்றிருப்பது தெரியவந்துள்ளது. சென்னை எண் ணூர் சத்தியவாணிமுத்து நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாக்கியம்(65). இவர் நேற்றிரவு வீட்டுவாசலில் தனியாக அமர்ந்திருந்தார்.

அந்த சமயத்தில் பைக்கில் வந்து இறங்கிய 3 பேர், மூதாட்டியை சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் மூதாட்டியை சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துவிட்டு தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய மூதாட்டி பாக்கியத்தை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், பாக்கியம் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து, உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் உத்தரவின்படி விசாரணை நடத்தினர். பாக்கியத்தின் பேரன் மகி (22). இவர் மற்றும் எண்ணூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார், விக்னேஷ் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எண்ணூர் அண்ணாநகரை சேர்ந்த ஜீவானந்தம் (25) என்பவருக்கும் மேற்கண்ட மூவருக்கும் இடையே ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை முற்றிய நிலையில், 3 பேரும் சேர்ந்து கடந்த மாதம் ஜீவானந்தத்தை வெட்டி காயப்படுத்தியுள்ளனர். இவ்வழக்கில் மூவரும் சிறை சென்றுவிட்டு கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். ஜீவானந்தம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்தநிலையில், தன்னை வெட்டியவர்களை பழிதீர்க்கவேண்டும் என்று ஜீவானந்தம் முடிவு செய்து நேற்றிரவு நண்பர்கள் 2 பேருடன் எண்ணூர் பகுதியில் பைக்கில் சுற்றியுள்ளார். அப்போது தன்னை தாக்கிய 3 பேரும் சிக்கவில்லை.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் மற்றும் அவரது நண்பர்கள் பைக்கில் சத்தியவாணி முத்துநகருக்கு வந்து அங்கிருந்த மகியின் பாட்டி பாக்கியத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது தனது பேரன் எங்கிருக்கிறான் என்று எனக்கு தெரியாது என கூறியதால் கோபத்தில் பாக்கியத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிரமாக ஜீவானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: