தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது

*மேலும் 5 வீடுகளில் கைவரிசை

தூத்துக்குடி : தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 36 பவுன் நகை கொள்ளையடித்த இளஞ்சிறார்கள் மூவர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் மேலும் 5 வீடுகளில் கைவரிசை காட்டியது அம்பலமானது. இவர்களிடமிருந்து 60 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.

தூத்துக்குடி அய்யாசாமி காலனி 3வது தெருவைச் சேர்ந்த அசரியாவின் மனைவி எஸ்தர் (52). தம்பதியின் ஒரேயொரு மகள் படித்து வருகிறார். இதனிடையே தனது கணவர் அசரியா மறைவுக்கு பிறகு வெளிநாட்டில் வசிக்கும் தனது தங்கை கெஸ்த்தி என்பவருக்கு சொந்தமான அய்யாசாமி காலனியில் உள்ள வீட்டில் வசித்து வந்த எஸ்தர், தங்கையின் 3 பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார்.

கோவையில் உள்ள அவரது உறவினருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் குழந்தையைப் பார்க்கும் பொருட்டு கடந்த ஏப். 26ம்தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் கோவைக்கு சென்ற எஸ்தர், பின்னர் மே 1ம் தேதி வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டு பின்பக்க கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு பதறினார். இதையடுத்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்ததோடு அதில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசில் அவர் புகார் அளித்தார்.

எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், எஸ்ஐ சண்முகம் மற்றும் தனிப்பிரிவு போலீசார் கலைவாணர், பொன்பாண்டி உள்ளிட்டோர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அருள்ராஜ் (எ) கருவாடு (20), சந்தோஷ்குமார் (21), சந்திரன் (20), ஹரி பிரசாத் (23), சோட்டையன்தோப்பைச் சேர்ந்த இளஞ்சிறார்கள் மூவர் என மொத்தம் 7 பேர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மேலும் இவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதேபோன்று மேலும் 5 வீடுகளில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது அம்பலமானது. இதையடுத்து 7 பேரையும் கைதுசெய்த போலீசார், இவர்களிடம் இருந்த 60 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் இவர்களது பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

The post தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: