நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதை ஊசி விற்ற 7 பேர் கைது

பூந்தமல்லி: நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை ஊசி விற்ற 7 பேரை, போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, கஞ்சா மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 நபர்களை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர்களை பிடித்து விசாரணை செய்தபோது, பிடிபட்டவர்கள் செம்பரம்பாக்கத்தை சேர்ந்த சூர்யா(29), சந்தோஷ்(21), தூத்துக்குடியை சேர்ந்த அமிர்தலிங்கம்(21), சூர்யா(21), மற்றும் 18 வயதுடைய 3 பேர் என்பது தெரியவந்தது.

7 பேரும் அந்த பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் தங்கி கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும், கஞ்சா புகைக்க இடம் இல்லாதவர்கள் தங்களது அறையிலேயே தங்க வைத்து கஞ்சா புகைக்க வைத்ததும் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, போதை ஊசிகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் கல்லூரியில் படித்து கொண்டிருந்தவர்கள் படிப்பு சரியாக வராததால் பாதியில் நிறுத்திவிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நசரத்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதை ஊசி விற்ற 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: