ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கோயில்ராஜ் மத்தேயு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் 90 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 23 டன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் 15 சிலிண்டர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1 டீசல் வழக்கு பதிவு செய்யப்பட்டு 70 லிட்டர் டீசல், 1 ஆயில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 320 லிட்டர் ஆயில் கைப்பற்றப்பட்டுள்ளது. ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 டூவீலர், 1 மூன்று சக்கர வாகனம், 3 நான்கு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் பொருள்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 741 மற்றும் வாகனங்களின் சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.

இந்த வழக்குகள் தொடர்பாக 108 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஆண்டு காஞ்சிபுரம் அலகில் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத 17 டூ வீலர்கள் மற்றும் 23 நான்கு சக்கர வாகனங்கள் மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவின் பேரில் விற்பனை செய்யப்பட்டு அதற்கான தொகி ரூ.34 லட்சத்து 98 ஆயிரத்து 809 அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

உரிமை கோரிய 1 டூவீலர் மற்றும் 1 நான்கு சக்கர வாகனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அரசு கணக்கில் செலுத்தியதின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரிசி கடத்தல் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: