கட்டிட அனுமதி மீறியதாக கூறி அதிமுக பிரமுகரிடம் ரூ3.5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது

 

ஆலந்தூர்: கட்டிட அனுமதியை மீறியதாக அதிமுக பிரமுகரிடம் ரூ3.5 லட்சம் கேட்டு மிரட்டியவரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் 10வது பிரதான சாலையை சேர்ந்தவர் மூர்த்தி (67). ஆலந்தூர் மேற்கு பகுதி அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக உள்ளார். இவர், தனது பழைய வீட்டை இடித்துவிட்டு, முறையாக அரசு அனுமதி பெற்று, புதிய வீடு கட்டி தற்போது 2 மாதங்களாக அந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், மூர்த்தியின் வீட்டிற்கு வந்து நீங்கள் அனுமதியை மீறி கட்டிடம் கட்டி இருப்பதாக, தேவா என்பவர் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து மூர்த்தி உதவி செயற்பொறியாளரிடம், தேவாவின் செல்போன் எண்ணை பெற்று, தனது மகன் பாலச்சந்திரன் மூலமாக, தேவாவை தொடர்பு கொண்டு பேசியபோது, ஆமாம் நான்தான் புகார் கொடுத்தேன், அந்த புகாரை வாபஸ் பெற வேண்டுமானால் 3 நாட்களுக்குள் எனக்கு ரூ3 லட்சத்து 50 ஆயிரம் தர வேண்டும், என மிரட்டியுள்ளார். இதனையடுத்து மூர்த்தி நேற்று ஆதம்பாக்கம் காவல நிலைய ஆய்வாளர் பிரவீன் ராஜேஷிடம் தன்னை பணம் கேட்டு மிரட்டிய தேவா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாவை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, பணம் கேட்டு மிரட்டியதை தேவா ஒப்புக் கொண்டார். இதனையடுத்து தேவகடாட்சம் (எ) தேவாவை கைது செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கட்டிட அனுமதி மீறியதாக கூறி அதிமுக பிரமுகரிடம் ரூ3.5 லட்சம் கேட்டு மிரட்டியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: