காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை : பாமக தலைவர் அன்புமணி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் கோடைகால சாகுபடியாக நெல், கரும்பு, வாழை, பருத்தி, உளுந்து, எள், சோளம், பச்சைப்பயறு, நிலக்கடலை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. குறுவை மற்றும் சம்பா பருவ பயிர்களுக்கே மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், கோடைகால பயிர்களுக்கு காவிரி நீர் கிடைக்காது என்றாலும், நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யலாம் என்ற நம்பிக்கையில் உழவர்கள் பயிரிட்டனர்.

மும்முனை மின்சாரத்தை நாள் முழுவதும் வழங்க முடியாவிட்டாலும் தினமும் 14 மணி நேரம் தடையின்றி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 6 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், கோடைகால பயிர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. எனவே காவிரி பாசன மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்திற்காவது மும்முனை மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தெந்த நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என்ற அட்டவணையையும் வெளியிட வேண்டும்.

The post காவிரி பாசன மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: