ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!

சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை வெளியாகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் கோடை விடுமுறை காலத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி, கொரோனா காலத்தைப் போல இ-பாஸ் நடைமுறையை பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், கொடைக்கானல், ஊட்டிக்கு செல்லும் பயணிகளுக்கு வரும் மே 7ம் தேதி முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை காலம் என்பதால் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வாகன நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு இடைஞ்சல் காரணமாக கொரோனா காலத்தில் இருந்தது போன்ற இ – பாஸ் நடைமுறையை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறைக்காக தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் பிரத்யேக இணையதளம் தயார் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பெயர், ஆதார் எண், சொந்த வாகன எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பித்து இ-பாஸை டவுன்லோடு செய்துகொள்ள கூடிய வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, இ-பாஸ் தொடர்பான வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன? உள்ளூர் வாகன விதிவிலக்கு எப்படி? போன்ற விவரங்கள் வழிகாட்டு நெறிமுறையில் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

The post ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: