அண்ணா நினைவு பூங்காவில் பாம்புகள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில், புதர்மண்டி பாம்புகள் தொல்லை அதிகரித்துள்ளதால் பூங்காவுக்கு செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சி பிள்ளையார்பாளையம் பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ரூ.2.40 கோடி திட்ட மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் சறுக்கு மரம், ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள், நடைபாதை, மண்டபம், பூச்செடிகள், அழகான புல்தரை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. காஞ்சிபுரத்தில் கோயில்களை தவிர, வேறு பொழுது போக்குவதற்கு இடம் இல்லாததால், இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில், இந்த பூங்காவை சுத்தம் செய்து பராமரிக்க, ஆட்கள் இருந்தனர். தற்போது யாரும் இல்லாததால், பூங்காவில் புதர் மண்டி கிடக்கிறது.

இதனால் அங்கு பாம்புகள் பெருகிவிட்டன. பொழுதுபோக்கிற்காக வரும் பகுதிவாசிகள், பாம்பை பார்த்து பயந்து ஓடும் நிலை உள்ளது. அங்குள்ள அலங்கார மின் விளக்குகள் சில கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால் சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. எனவே இந்த பூங்காவை நன்கு பராமரித்து, சிறுவர்கள் அச்சமின்றி செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அண்ணா நினைவு பூங்காவில் பாம்புகள் தொல்லை: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: