2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: வட தமிழக உள் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி முதல் 104 டிகிரியும், வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 90 டிகிரி முதல் 99 டிகிரி வரையும் இருந்தது.

அதிகபட்சமாக ஈரோடு, திருச்சி, வேலூர் பகுதிகளில் 106 டிகிரியும், சேலம், தர்மபுரி, மதுரை விமான நிலையம், நாமக்கல் 104 டிகிரியும், கோவை 102 டிகிரி, தஞ்சாவூர், திருப்பத்தூர், தொண்டி, சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி இருந்தது. இந்நிலையில், அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சில இடங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் தமிழக உள் மாவட்டங்களில் சமவெளிப்பகுதிகளில் பல இடங்களில் 100 டிகிரி முதல் 106 டிகிரி வரையும் வெயில் இருக்கும். இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரை தென் தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

The post 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: