வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு: வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ் சூறாவளி பிரசாரம்

சென்னை:வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜ சார்பில் ஆர்.சி.பால்கனகராஜ் போட்டியிடுகிறார். கடந்த 20 நாட்களாக அவர் வடசென்னையின் அனைத்து பகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து மக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது, அவர் வடசென்னை தொகுதி மக்களுக்காக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.

தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வடசென்னை தொகுதிக்கான பாஜவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தமிழக பாஜ மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில், வடசென்னை தொகுதி நாட்டிலேயே முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷ வாயுக்களை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும். ரயில்வே கிராசிங் தேவையுள்ள இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும். பெண்களுக்கு தனி உடற்பயிற்சி பூங்காக்கள் அமைக்கப்படும். கொடுங்கையூர் குப்பை கிடங்கை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என பால் கனகராஜ் கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது வடசென்னை நாடாளுமன்ற அமைப்பாளர், பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத், வடசென்னை பாராளுமன்ற பொறுப்பாளர் பாஜ மாநில செயலாளர் சதீஷ்குமார், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ தேர்தல் அறிக்கை வெளியீடு: வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜ் சூறாவளி பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: